2,092 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.37 லட்சம் அபராதம்! 119 பஸ்கள் பறிமுதல்! போக்குவரத்துத் துறை அதிரடி!
சென்னை: கடந்த 6 நாட்களில் மட்டும் தமிழ்நாடு முழுவதும் 2,092 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.37 லட்சம் அபராதம் விதித்து அதிரடி காட்டியுள்ளது போக்குவரத்துத் துறை. அதேபோல் உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்ட 119 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு சனிக்கிழமை தொடங்கி இன்று வரை 4 நாட்கள் தொடர்ந்து விடுமுறை என்பதால் சென்னை உட்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பணி நிமித்தமாக வசிப்போர் குடும்பத்தினருடன் அவரவர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். சென்னையிலிருந்து மட்டும் கடந்த வெள்ளி மற்றும் சனி ஆகிய இரண்டு நாட்களில் 3 லட்சம் பேர் சொந்த ஊர் புறப்பட்டுச் சென்றிருக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி முதலே அதிரடி சோதனைகளை தொடங்கிவிட்ட போக்குவரத்துத் துறை அதிகாரிகள், 119 ஆம்னி பேருந்துகளை பறிமுதல் செய்ததோடு 2,000க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளுக்கு ஃபைன் அடித்தனர். அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக கிடைத்த புகார், உரிய ஆவணங்கள் இல்லாமல் பேருந்து இயக்குதல், என பல்வேறு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதுவரை 13,000க்கும் மேற்பட்ட ஆம்னிப் பேருந்துகள் சோதனையிடப்பட்டன. அதில் 2,092 பேருந்துகளுக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டுள்ளன. அதேபோல் வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருந்த பேருந்து நிறுவனங்களுக்கு 28 லட்சம் ரூபாய் வரி விதிக்கப்பட்டு ஆன் தி ஸ்பாட்டில் 15 லட்சம் ரூபாய் வரை வரி வசூலிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறை அதிகாரிகளின் இந்த ஆக்ஷன் காரணமாக தான் ஆம்னி பேருந்துகள் இன்று மாலை முதல் இயங்காது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் ஒரு பிரிவினர் அறிவிப்பு வெளியிட்டனர்.
பறிமுதல் செய்யப்பட்ட 119 பேருந்துகளை முழுமையாக விடுவிக்க வேண்டும் என்ற அவர்களது கோரிக்கையை அப்படியே ஏற்க முடியாது என கறார் காட்டிய அமைச்சர் சிவசங்கர், கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்க உத்தரவிட்டார். இதனால் ஜகா வாங்கிய ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் ஒரு பிரிவினர் வேலை நிறுத்தத்தை 2 மணி நேரத்தில் வாபஸ் பெற்றுக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications