ரூ.2 கோடி மோசடி! பைனான்சியருககு எதிராக நடிகர் விமல் அளித்த புகார்.. சென்னை ஹைகோர்ட் போட்ட உத்தரவு
சென்னை: தன்னை ஏமாற்றி, 2 கோடி ரூபாயை மோசடி செய்துவிட்டதாக சினிமா பைனான்சியர் கோபி, வினியோகஸ்தர் சிங்காரவேலன், அவரது மேலாளர் விக்னேஷ் ஆகியோருக்கு எதிராக, விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கை முடித்து வைத்து விட்டதாக விருகம்பாக்கம் போலீசார், சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விமல். களவானி, பசங்க, கலகலப்பு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் விமல் , தன்னை ஏமாற்றி, 2 கோடி ரூபாயை மோசடி செய்துவிட்டதாக சினிமா பைனான்சியர் கோபி, வினியோகஸ்தர் சிங்காரவேலன், அவரது மேலாளர் விக்னேஷ் ஆகியோருக்கு எதிராக, விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, விக்னேஷ்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இரண்டு மாதங்களுக்குள் இந்த வழக்கை முடிக்க வேண்டும் என, விருகம்பாக்கம் போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் விருகம்பாக்கம் போலீசார் இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என தெரிகிறது.
இதையடுத்து மீண்டும் விக்னேஷ்குமார் தரப்பில், நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தவில்லை என விருகம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் சுமதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் ஆய்வாளர் தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், வழக்கு தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தப்பட்டதாகவும், பிரச்சனை தொடர்பாக நீதிமன்றத்தை அணுகும்படி இரு தரப்புக்கு அறிவுறித்தி, வழக்கை முடித்து வைத்து, நடவடிக்கை கைவிடப்பட்டது என்றும் இது தொடர்பாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications