சென்னைக்கு மீண்டும் வந்த 2 மணி நேர மின்வெட்டு.... துண்டு துண்டாக வெட்டி அமல்!
சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் மின் பற்றாக்குறைக் காரணாக சென்னையில் இன்று முதல் 2 மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது..
நிலக்கரி பற்றாக்குறை மற்றும் பராமரிப்புப் பணிகள் காரணமாக தமிழகத்தில் மின் உற்பத்தி குறைந்துள்ளது. வடகிழக்குப் பருவ மழையும் இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் மின் பயன்பாடும் குறையவில்லை.

இதனால் தமிழகத்தில் 2 ஆயிரம் மெகாவாட்டுக்கும் அதிகமாக மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மீண்டும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களும் மின்வெட்டை எதிர்கொண்டாலும் சென்னை தப்பித்துக் கொண்டிருந்தது.
இன்று முதல் சென்னைக்கும் 2 மணி நேர மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை சுழற்சி முறையில் இந்த மின்வெட்டு நடைமுறைக்கு வந்தது.
சென்னையில் பல இடங்களில் தொடர்ச்சியாக 2 மணி நேரமும் சில இடங்களில் காலையில் 1 மணி நேரம் மாலையில் 1 மணிநேரமும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியிலோ விசித்திரமாக மின்வெட்டு அமலாக்கப்பட்டது. அதாவது காலையில் 8 மணி முதல் 9 மணி வரை சீராக 1 மணி நேரம் மின்வெட்டு அமலானது.
பின்னர் மாலை 3 மணிக்கு மிகச் சரியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சரி 3 மணி முதல் 4 மணி வரை மின்வெட்டு போல என நினைத்தவர்களுக்கு இன்ப ஷாக்காக 3.30க்கே மின்சாரம் கொடுக்கப்பட்டது.
இந்த இன்ப ஷாக் நீண்டநேரம் நீடிக்காமல் மீண்டும் சிறிது நேரம் மின்வெட்டு துண்டிக்கப்பட்டது. இப்படியே சிறிது சிறிது நேரமாக என ஒரு மணி நேர கணக்குக்கு மின்வெட்டும் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டது.
நாளைக்கு என்ன விசித்திரமான முறையில் மின்வெட்டு அமல்படுத்தப்படுமோ என்ற டென்ஷனில் இப்போது சென்னை வாசிகள்...












Click it and Unblock the Notifications