Gas Shortage: ஹோட்டல், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் சலுகை! ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் அறிவிப்பு
சென்னை: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவகங்கள், டீக்கடைகள் மின் அடுப்புகளை பயன்படுத்துவதால் அவர்களுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டுக்கு ரூ 2 சலுகை கொடுக்கப்படும் என மின் வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சிலிண்டர், பெட்ரோல் டீசல் கையிருப்பு, தேவை குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் அந்தந்த துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அதை தொடர்ந்து அவர்கள் பேட்டி அளித்தனர்.

அதில் மின்வாரியத் தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் கூறியிருப்பதாவது: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் பல்வேறு ஓட்டல்கள், டீக்கடைகளில் மின் அடுப்புகளை பயன்படுத்துகிறார்கள்.
அவர்களுக்கு மின் கட்டணத்தில் ஒரு யூனிட்டுக்கு ரூ 2 என சலுகை வழங்கப்படும். இந்த சலுகை, மத்திய அரசு அறிவித்த வணிக எரிவாயு கட்டுப்பாடு இருக்கும் வரை தொடரும். எரிவாயு தட்டுப்பாட்டை சீர் செய்வது தொடர்பாக பலதரப்பட்டவர்களிடம் ஆலோசனை நடத்தினோம். கேஸ் சிலிண்டர் பிரச்சினையை தினமும் கவனித்து வருகிறோம்.
எதற்காக மின் பயன்பாடு அதிகரித்தது என ஆராயப்படாது. மின் உபகரணங்களை கொள்முதல் செய்ய 25 சதவீதத்திற்கும் அதிகமாக ரூ 3.05 லட்சம் மானியத்துடன் கடன் பெறலாம். 60,698 தொழிற்சாலைகள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் இசைவின்றி மாற்று எரிவாயுவை பயன்படுத்தலாம்.
விறகுகளை எரிக்கவும் மாசு கட்டுப்பாட்டின் முன் அனுமதியை பெற தேவையில்லை. வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவகங்களில் விறகுகள் பயன்படுத்தப்படுவதால் அரசு சலுகை வழங்கப்படும்.
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 3228 லிட்டர் மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்படும். இடையூறின்றி 194 உழவர் சந்தைகளில் காய்கறிகள், பழங்களை விற்கலாம். இவ்வாறு ராதாகிருஷ்ணன் பேசினார்.
இதைத் தொடர்ந்து மாநில அரசு எண்ணெய் நிறுவன ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை பேசுகையில், "தமிழகத்தில் கையிருப்பு உள்ள பெட்ரோல், டீசல் 9 நாட்களுக்கு உள்ளது. ஒரே நாளில் 100% பெட்ரோல் விற்பனையும் 75 சதவீத டீசல் விற்பனையும் அதிகரித்துள்ளது.
நேற்று விற்பனை 20% மற்றும் 21 சதவீதமாக குறைந்துள்ளது. பெட்ரோல் டீசல் குறித்து பயம் கொள்ளத் தேவையில்லை. வீட்டு உபயோக சிலிண்டர்கள் 25 நாட்களுக்கு ஒரு முறை நகர் பகுதியில் வினியோகம் செய்யப்படும்.
கிராமப்புற பகுதிகளில் 45 நாட்களுக்கு ஒரு முறை வீட்டு உபயோக சிலிண்டர் வழங்கப்படும். வீட்டு உபயோக சிலிண்டர்கள் இம்மாத இறுதிவரை ஸ்டாக் உள்ளது. மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் போன்ற இடங்களுக்கு வணிகர் ரீதியான சிலிண்டர்கள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்." என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications