தமிழகத்தில் காலியாக இருக்கும் 20 தொகுதிகள்... எப்போது இடைத்தேர்தல்?
Recommended Video
சென்னை : 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்ற 3வது நீதிபதி இறுதித் தீர்ப்பில் கூறியுள்ளார், மேலும் 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தத் தடையில்லை என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏக்கள் மறைவால் 2 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் மொத்தம் 20 தொகுதிகள் இடைத்தேர்தலுக்காக காத்திருக்கின்றன.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுக ஆட்சி தப்புமா என்ற பல முறை விவாதங்கள் நடந்தன. அதிமுக ஓ.பிஎஸ், தினகரன் அணியாக பிரிந்து பின்னர் ஓபிஎஸ் ஈபிஎஸ் அணி, தினகரன் எதிர் அணி என்று மாறியது. கட்சியும் சின்னமும் ஈபிஎஸ், ஓபிஎஸ் வசமாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை நிறுவினார் தினகரன். தினகரன் அணி ஆட்சியை கலைக்க பெரிதும் நம்பி இருந்த சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து இருந்த வழக்கில் வெளியாகும் தீர்ப்பை பொறுத்தே இருந்தது.
18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் செல்லாது என்று நீதிமன்றம் அறிவித்தால் இதையே சாதகமாக்கி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி ஆட்சியை கவிழ்க்கலாம் என்று தினகரன் தரப்பு எண்ணியது. ஆனால் தீர்ப்பு அவர்களுக்கு சாதகமாக அமையவில்லை. மேலும் 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தினகரன் தரப்பு நீதிமன்றத்தில் வாங்க இருந்த தடையையும் நீதிபதி நீக்கியுள்ளார்.
இதனால் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரின் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்த இருந்த தடை நீங்கியுள்ளது. எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட போதே இந்த தொகுதிகளை சபாநாயகர் காலியாக அறிவித்து விட்டார், நீதிமன்ற தடையால் இடைத்தேர்தல் நடத்தப்படாமல் இருந்த நிலையில் தற்போது தடையும் நீங்கி உள்ளதால் எப்போது தேர்தல் என்பதை தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்.
பெரம்பூர், சோளிங்கர், ஒட்டப்பிடாரம், சாத்தூர்,விளாத்திக்குளம், பரமக்குடி, திருப்போரூர், பூந்தமல்லி, நிலக்கோட்டை, ஆம்பூர், குடியாத்தம், அரவக்குறிச்சி, பாப்பிரெட்டிப்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், தஞ்சாவூர், அரூர், மானாமதுரை உள்ளிட்ட 18 தொகுதிகள் காலியாக இருப்பது தற்போது நீதிமன்ற தீர்ப்பால் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் திருவாரூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த கருணாநிதி, திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸ் உள்ளிட்டோர் உயிரிழந்துள்ளதால் இந்த தொகுதிகளும் காலியாக உள்ளன.
தமிழகத்தில் மொத்தம் 20 தொகுதிகள் தற்போது காலியாக உள்ளது உறுதியாகி உள்ளது. இது குறித்த அறிவிப்பு தேர்தல் ஆணையத்திடம் அளித்துவிட்ட நிலையில் இடைத்தேர்தலை எப்போது நடத்துவது என்ற இறுதி முடிவு தேர்தல் ஆணையத்தின் கையிலேயே உள்ளது. ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே விதி.