பாமகவில் 30% பெண்கள், 20% பட்டியலினத்தவர்.. இதுதான் சமூகநீதி.. திமுக, அதிமுகவை சீண்டும் ராமதாஸ்!
சென்னை: பாமக வேட்பாளர்களில் 30% மகளிர், 20 % பட்டியலினத்தவர், இது தான் நாங்கள் விரும்பும் சமூகநீதி, திமுக, அதிமுகவில் இந்த நிலை எங்கே என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதன் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனி கூட்டணியாகவும் நாம் தமிழர் கட்சி தனித்தும் போட்டியிடுகிறது. பாமக யாருடன் கூட்டணி வைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தங்களது கட்சி பாஜகவுடன் கூட்டணி வைப்பதாக அறிவித்தது. இதையடுத்து பாஜக கூட்டணியில், பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

காஞ்சிபுரம், அரக்கோணம், தருமபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய தொகுதிகள் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டன. அதற்கான வேட்பாளர் பட்டியலை பாமக நேற்று அறிவித்தது. திண்டுக்கல் - திலகபாமா, அரக்கோணம் - வழக்கறிஞர் கே.பாலு, ஆரணி - முனைவர் அ.கணேஷ் குமார், கடலூர் - திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான் மயிலாடுதுறை - ம.க. ஸ்டாலின், கள்ளக்குறிச்சி - இரா. தேவதாஸ், தருமபுரி - சௌமியா அன்புமணி, சேலம் - ந. அண்ணாதுரை, விழுப்புரம் - முரளி சங்கர், காஞ்சிபுரம் - ஜோதி முருகன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பாமகவில் பெண்களுக்கு 3 சீட்: பாஜக கூட்டணியில் பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகள் 2 தொகுதிகள் தனி தொகுதிகள் ஆகும். 2 பட்டியலின வேட்பாளர்களுக்கு பாமக வாய்ப்பு அளித்துள்ளதாகவும், 3 பெண்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளதாகவும், திமுக, அதிமுகவில் இந்த நிலை இல்லை என்றும் தெரிவித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில், "2024 மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் 10 தொகுதிகளின் வேட்பாளர்களில் சவுமியா அன்புமணி (தருமபுரி), கவிஞர் திலகபாமா (திண்டுக்கல்), ஜோதி வெங்கடேசன் (காஞ்சிபுரம்) ஆகிய மூவர் பெண்கள். மொத்த தொகுதிகளில் 30% மகளிருக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது தான் மகளிருக்கு அதிகாரம் வழங்குதல், இது தான் சமூகநீதி.
பாமக தான் சமூக நீதிக் கட்சி: தமிழ்நாட்டில் வேறு எந்தக் கட்சியும் மகளிருக்கு இந்த அளவுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கவில்லை. அதனால் தான் சொல்கிறோம், பாட்டாளி மக்கள் கட்சி தான் சமூகநீதிக் கட்சி என்று!
அதேபோல், பா.ம.க. போட்டியிடும் 10 தொகுதிகளில் காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய இரு தொகுதிகள் பட்டியல் சமூகங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தலித் கட்சிகளைத் தவிர, திமுகவோ, அதிமுகவோ அல்லது வேறு எந்தக் கட்சியுமோ பட்டியலினத்தவருக்கு 20% பிரதிநிதித்துவம் வழங்கவில்லை. இது தமிழ்நாட்டின் மொத்த தொகுதிகளில் பட்டியலினத்தவருக்கு வழங்கப்பட்டுள்ள தனித் தொகுதிகளின் பிரதிநிதித்துவத்தை விட அதிகம் ஆகும். இது தான் பட்டியலினத்தவருக்கு அதிகாரம் வழங்குதல், இது தான் சமூகநீதி.
இதற்கு முன் 1999 மக்களவைத் தேர்தலில் 7 தொகுதிகளில் மட்டும் போட்டியிட்ட போதே சிதம்பரம், இராசிபுரம் ஆகிய இரு தொகுதிகளை, அதாவது 28.70% தொகுதிகளை பட்டியலினத்தவருக்கு ஒதுக்கிய வரலாறு பாட்டாளி மக்கள் கட்சிக்கு உண்டு. இது தான் நாங்கள் விரும்பும் சமூகநீதி!" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications