"30 வருட பாரம்பரிய கட்சி செய்யக்கூடிய காரியமா இது?".. மக்கள் மனதை சுற்றி வந்த.. ஒரே கேள்வி!
சென்னையில் வன்னியர்கள் ஆர்ப்பாட்டத்தினால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்
சென்னை: ஒரே கேள்விதான், 30 வருட பாரம்பரிய கட்சி செய்யக்கூடிய காரியமா இது? என்ற கேள்வியைதான் நேற்றைய தினம் பாமகவின் போராட்டம் ஏற்படுத்தியது.
இட ஒதுக்கீடு தேவையா, தேவையில்லையா? அது சம்பந்தமாக கோரிக்கை விடுப்பதும், மறுப்பதும் என்ற விஷயத்திற்குள்ளேயே யாரும் செல்லவில்லை... ஆனால் நேற்று முழுக்க பாமகவினர் நடத்திய ஆர்ப்பாட்டம், பல இடங்களில் வன்முறையாக மாறி, மக்களை கடுமையாக பாதித்து விட்டதை மறுக்க முடியாது.
மக்கள் மனதில் பாமக குறித்த கசப்புணர்வு அது அதிகரித்து விட்டது. சமீப காலத்தில் அக்கட்சி சம்பாதித்து வைத்திருந்த பல நல்ல பெயர்கள் நேற்று ஒரே நாளில் காலியாகி விட்டன என்று கூட சொல்லலாம்.
பாமக, வன்னியர் சங்கத்திற்கு தடை.. ராமதாஸ் மீது வழக்கு.. ஹைகோர்ட்டில் அவசர முறையீடு
ரயில் மறியல்
காலையிலேயே போராட்டம் ஆரம்பமானது.. நேரம் ஆக ஆக சென்னையின் பிரதான சாலைகள் முடக்கப்பட்டன.. அதனால் எந்த வண்டியும் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டது... அதேபோல, ரயிலை மறிக்க ஒரு க்ரூப் கிளம்பிவிட்டது. ஒருகட்டத்தில் ஓடிக் கொண்டிருந்த ரயில் மீது கற்களை எரியும் வேலையும் நடந்தது... பேரிகார்டுகளை தூக்கி தண்டவாளத்தின் மீது வீசினர்.
பாமகவினர்
இதனால் சாலை போக்குவரத்து, ரயில் போக்குவரத்து என மொத்தமும் ஸ்தம்பித்தது. நடு ரோட்டில்வந்து பாமகவினர் நடத்திய போராட்டத்தால் மக்கள் பீதியடைந்தனர். பெண்கள், குழந்தைகளுடன் டூவீலரில் வந்த மக்கள் பெரும் பீதியுடன் அந்த இடங்களைக் கடந்ததைக் காண முடிந்தது. மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.. யாராலும் எந்த வேலையும் நேற்று செய்ய முடியவில்லை.. பல இடங்களில் தள்ளுமுள்ளு நடந்தது.. சில இடங்களில் போலீசார் அவர்களை கட்டுப்படுத்த முன்வரவில்லை. பொதுமக்களின் சிரமத்தை பாமகவினர் உணரவே இல்லை.
தனி ஆணையம்
இன்னும் சொல்லப்போனால், மதியம் வரை பாமகவினர் கைதும் செய்யப்படவில்லை.. இவ்வளவு நடந்த பிறகு நேற்று மாலை, சாதி வாரியான கணக்கெடுப்பை நடத்த தனி ஆணையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதை கண்துடைப்பு என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறி விட்டார். இப்படி ஒரு போராட்டம் நடத்தப்போவதாக ராமதாஸ் அறிவித்து 2 மாதங்களாகிறது.. அப்போதே இதற்கான எந்தவித முன்னெச்சரிக்கையும் அரசு தரப்பில் எடுக்கவில்லை..
அலர்ட்
இது எல்லாவற்றிற்கும் மேலாக, கடந்த 6 மாதமாக சென்னைவாசிகளுக்கு தொற்று அபாயத்தை அளவுக்கு அதிகமாக உணர்த்தி கொண்டிருந்தது டாக்டர்கள் ராமதாசும், அன்புமணியும்தான்.. சென்னை மக்களுக்கு அலர்ட் செய்து கொண்டே இருந்தனர்.. வெளியில் வராதீங்க.. மாஸ்க் போடுங்க என்று தொடர்ந்து அட்வைஸ் தந்து கொண்டே இருந்தனர்.. ஆளும் அரசுக்கும் ஆலோசனை வழங்கி கொண்டே இருந்தனர். வேறு எந்தத் தலைவரும் செய்யாத அளவுக்கு நிறைய அட்வைஸ் கொடுத்தது இந்த இரு தலைவர்களும்தான். அதற்காக மக்களின் பாராட்டுக்களையும் பெற்றிருந்தனர்.
தைலாபுரம்
இப்படி 6 மாசமாக சென்னை மக்களை பொத்தி பொத்தி பாதுகாக்கும் நடவடிக்கையில் இருந்துவிட்டு, "என் உடல்தான் தைலாபுரத்தில் உள்ளது, உள்ளம் போராட்ட களத்தில் உள்ளது" என்று ட்வீட் போட்டு வன்னியர்களை உசுப்பிவிட்டது சரியா என்ற கேள்வியை சென்னை மக்கள் நேற்று எழுப்பினர். அதன்மூலம் தொற்று பரவினால் இதற்கு யார் பொறுப்பு ஏற்பது? இதை பாமகவின் அரசியல் லாபம் என்பதா? அல்லது அதிமுகவின் கூட்டணி அரசியல் லாபம் இது என்பதா தெரியவில்லை.
மறுக்க முடியாது
ஆனால், அத்துமீறிய நடந்து கொண்ட போராட்டத்தினால் பாதிக்கப்பட்டதும், அதிர்ச்சியில் உள்ளதும் அப்பாவி மக்கள்தான்.. கூடவே பாமக மீதான அதிருப்தியும் கூடி விட்டதையும் மறுக்க முடியாது! அரசியல் கட்சிகளின் போராட்டங்கள் தவிர்க்க முடியாதவைதான், ஜனநாயக மாண்புகளில் ஒன்றுதான்.. ஆனால் அது சாமானிய மக்களைப் பாதிக்கும் வகையில் இருக்க வேண்டியது அதை விட முக்கியம்!!