தமிழகத்தில் டிசம்பர் 15க்குள் 2000 மினி கிளினிக்: தமிழக முதல்வரின் அசத்தல் அறிவிப்பு
தமிழகம் முழுவதும் ஒரு மருத்துவர், செவிலியர், உதவியாளர் அடங்கிய 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் டிசம்பர் 15ம் தேதிக்குள் தொடங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
சென்னை: கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் ஒரு மருத்துவர், நர்ஸ், உதவியாளர் கொண்ட 2 ஆயிரம் மினி கிளினிக் செயல்படும். இந்த மினி கிளினிக் வரும் டிசம்பர் 15ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று முதல்வர் எடப்படி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு முடியும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழக டிஜிபி திரிபாதி உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிச்சாமி, கொரோனா நோய் தொற்று கட்டுப்பாடு, சிகிச்சை மற்றும் நிவாரண பணிகளுக்காக இதுவரை அரசு செலவிட்ட தொகை ரூ.7,525.71 கோடியாகும். நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் கபசுர குடிநீர், கிருமி நாசினி தெளிப்பு, தூய்மை பணிகள், நடமாடும் மாதிரி சேகரிப்பு வாகனங்கள் மூலம் கொரோனா பரிசோதனை என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் விளைவாக கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது.
தமிழகத்தில் இதுவரை 5,22,530 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, 2,79,36,147 பேர் பரிசோதனை செய்து கொண்டனர். இதில், 11,46,363 பேருக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டது. காய்ச்சல் முகாம்கள் நடத்தியதன் விளைவாக வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் உள்ளவர்களை கண்டறிய முடிந்தது. அத்துடன், விளம்பர கையேடுகள் மூலம் ரத்த கொதிப்பு, இதயநோய், சிறுநீரக பாதிப்பு போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கி, அதனை வீடு, வீடாக கொண்டு சேர்க்கப்பட்டதன் விளைவாகவும் இந்நோய் பரவல் குறைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுத்ததன் விளைவாகவும், பொதுமக்கள் ஒத்துழைப்பாலும் கொரோனா நோய் பரவல் குறைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அரசு அறிவித்த வழிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும், அதை மாவட்ட நிர்வாகமும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
கொரோனா வைரஸ் நோய்க்கு சிகிச்சை அளிக்க 15 ஆயிரம் மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். உயிர் காக்கும் மருந்து கொள்முதல் செய்து தயார் நிலையில் வைத்திருந்தோம். தமிழகம் முழுவதும் ஒரு மருத்துவர், செவிலியர், உதவியாளர் அடங்கிய 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் டிசம்பர் 15ம் தேதிக்குள் தொடங்கப்படும்.
தமிழகத்தில், தற்போது திருமண விழாக்கள் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பெரும்பாலான பொதுமக்கள் முகக்கவசம் அணிவதில்லை. இதுபோன்ற செயல்பாடுகள் காரணமாக மற்ற மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவுவதாக செய்திகள் வருகின்றது.
அதனால் திருமணம் உள்ளிட்ட பொதுநிகழ்ச்சிக்கு செல்பவர்கள் மற்றும் கோயில்கள், கடைகள், வெளியில் செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். அப்போதுதான் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவாமல் தடுக்க முடியும் என்றார்.
டிசம்பர் மாதம் முதல் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், பல்வேறு புதிய தளர்வுகள் அறிவிப்பது குறித்து தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது பற்றிய அறிவிப்பை முதல்வர் அறிவிப்பார். அதன்படி, கூடுதல் தளர்வாக டிசம்பர் மாதம் முதல் சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல அனுமதிக்க அதிக வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications