2024 நாடாளுமன்றத் தேர்தல்! 5 தொகுதிகளுக்கு பாஜக குறி! நடைபயணம் பற்றி அண்ணாமலை டிஸ்கஷன்!
சென்னை: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் எப்பாடுபட்டேனும் 5 தொகுதிகளில் வென்றுவிட வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு களப்பணிகளை தொடங்கியுள்ளது பாஜக.
அதிமுகவிடம் 10 தொகுதிகள் வரை கேட்டுப் பெறுவது என்ற அஜெண்டாவோடு இருக்கும் பாஜக, 5 தொகுதிகளில் உறுதியாக வெல்ல வேண்டும் என ரொம்பவே மெனக்கெட்டு வருகிறது.
இதனிடையே பாஜக போட்டியிடும் தொகுதிகளை அடையாளம் கண்டு விரைவில் அங்கு நடைபயணம் நடத்துவது பற்றியும் அண்ணாமலை ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

2024 நாடாளுமன்றத் தேர்தல்
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் முழுமையாக 2 ஆண்டுகள் கூட இல்லாததால், நாடு முழுவதும் தேர்தல் முன்களப் பணிகளை பாஜக தொடங்கிவிட்டது. அந்த வகையில் தமிழகத்தின் மீது தனிக்கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது பாஜக தேசியத் தலைமை. அண்மையில் கூட பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா 2 நாள் பயணமாக காரைக்குடி வந்து கட்சி நிர்வாகிகளுக்கு சில ஆலோசனைகளை வழங்கிச் சென்றார். அவரைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் தமிழகத்துக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

அதிமுக கூட்டணி
தமிழகத்தை பொறுத்தவரை 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் என்பது உறுதியாகியுள்ளது. இதனிடையே கடந்த முறை போல் இல்லாமல் இம்முறை அதிமுகவிடம் 10 தொகுதிகள் வரை கேட்டுப்பெறும் திட்டத்தில் இருக்கிறார்கள் தமிழக பாஜக நிர்வாகிகள். இதில் எப்பாடுபட்டேனும் குறைந்தபட்சம் 5 தொகுதிகளிலாவது உறுதியாக வெற்றிபெற வேண்டும் என கணக்குப் போட்டு களப்பணிகளை முடுக்கிவிட்டுள்ளது தமிழக பாஜக.

தொகுதிகள் விவரம்
கன்னியாகுமரி, நீலகிரி, வேலூர், தொகுதிகளில் பாஜக பரபரப்பாக சத்தமின்றி தேர்தல் பணிகளை ஆரம்பித்துவிட்டது. இன்னும் எஞ்சியுள்ள தொகுதிகளையும் விரைவில் அடையாளம் கண்டு அங்கும் தேர்தல் பணிகள் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே பாஜக போட்டியிட உத்தேசித்துள்ள தொகுதிகளில் நடைபயணம் செல்வது பற்றியும் அண்ணாமலை ஆலோசித்து வருவதாகவும் ஆனால் இதன் தாக்கம் எந்தளவு மக்கள் மத்தியில் இருக்கும் என்பதை பொறுத்து அவர் இதில் இறுதி முடிவெடுப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம் வருவார்கள்
மத்திய அரசின் திட்டங்கள் பற்றி ஆய்வு செய்ய மத்திய அமைச்சர்கள் இனி அடிக்கடி தமிழகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மேற்கொண்ட வேல் யாத்திரை ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தியதோடு அப்போது பேசுபொருளாகவும் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications