அதிமுக அலறிக்கிடக்க.. திமுக துள்ளி குதிக்க.. காலி தொகுதிகள் எண்ணிக்கை 21 ஆகிறது?
காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது.
சென்னை: சிக்கல் மேல் சிக்கல் என இடியாப்ப சிக்கலுக்குள் நுழைந்து கொண்டிருக்கிறது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு! அமைச்சர் பாலகிருஷ்ணன் பதவி பறிபோனதன் காரணமாக, தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகள் எண்ணிக்கை 21 ஆக உயரப் போகிறது.
கொஞ்ச நாள் முன்பு வரை 20 தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்தாமல் தப்பியே வந்தது ஆளும் அரசு. ஆனால் நீதிமன்ற நெருக்கடி காரணமாக ஒரே ஒரு தொகுதியில் இடைத்தேர்தலை அறிவிக்க அதற்கும் மாஸ்டர் பிளான்கள் தீவிரமாக நடைபெற்றது.
அதன் விளைவாக இடைத்தேர்தலும் ரத்தாகி போனது. இந்த சந்தோஷத்தை ஒருநாள்கூட அதிமுக அரசால் அனுபவிக்க முடியவில்லை. அதற்குள் அடுத்த சிக்கல் வந்து சேர்ந்து விட்டது.
3 வருடம் ஜெயில்
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி மீதான வழக்கு ஒன்றில் இப்போது தீர்ப்பு வந்துள்ளது. அதன்படி, 1998ம் வருடம் பஸ் ஒன்றின் மீது கல் வீசி தாக்கிய வழக்கில், அமைச்சருக்கு எதிரான தீர்ப்பு வந்துள்ளதுடன், 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்துள்ளது கோர்ட்.
காலி தொகுதி 21?
தீர்ப்பைத் தொடர்ந்து அவரது எம்எல்ஏ பதவி, அமைச்சர் பதவி பறி போய் விட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் தமிழக அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது. ஏற்கனவே 20 தொகுதிகளுக்கு தேர்தலை நடத்த முடியாத நிலையில் இன்னொரு தொகுதியும் சேர்ந்து 21 தொகுதி என்று உயரவுள்ளது.
இன்னொரு விக்கெட்
ஏற்கனவே அதிமுக அரசு பலவீனமாக உள்ளது. பெரும்பான்மையை இழந்து வரும் அரசாக உள்ளது என்ற பெயரை சுமந்து கொண்டுள்ளது. இப்போது ஆளும் தரப்பிலேயே இன்னொரு விக்கெட் விழுந்துள்ளதால், அதிமுக அரசு அலறிக்கிடக்க.. திமுக தற்போது துள்ளி குதித்து வருகிறது.
வாய்ப்பே இல்லையே
ஆனாலும் இந்த 21 தொகுதிகளுக்கும் இப்போதைக்கு இடைத் தேர்தலுக்கு வாய்ப்பே இல்லை.. அதுதான் ஏப்ரல் வரை நடத்த வேண்டாம் என்று ஏற்கனவே தமிழக அரசு தேர்தல் ஆணையத்துக்கு லெட்டர் போட்டு விட்டதே.