இதான் சார் மொழி பக்தி.. இந்தியில் டிவீட் போட்ட எச்.ராஜாவுக்கு.. நெட்டிசன்கள் வஞ்ச புகழ்ச்சி பாராட்டு
21 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என எச்.ராஜா பதிவிட்டுள்ளார்
சென்னை: "தனிமை சாபமல்ல, அது ஒரு வரம்.. நோய் தடுக்க தனிமைப்படுங்கள்.. மனதால் ஒன்றுபடுங்கள்... தேசம் காக்க தனிமைப்படுங்கள்... உலகம் வாழ தனிமைப்படுங்கள்.. உங்கள் உள்ளுக்குள் பயணப்படுங்கள்... " என்று எச்.ராஜா கவிதை வரியில் ட்வீட் பதிவிட்டுள்ளார். அத்துடன் ஹிந்தியிலும் ஒரு பதிவு போட்டு தனிமைப்படுங்கள் என்று வலியுறுத்தி உள்ளார்.
அச்சுறுத்தும் கரோனா வைரசுக்கு மருந்து இன்னும் கண்டுபிடிக்கவில்லை.. அதனால் ஆபத்திலிருந்து தற்காத்து கொள்ள தனிமைப்படுத்துதலை தவிர வேறு எந்த வழியும் இல்லை என்ற நிலையே ஏற்பட்டுள்ளது.
இப்போது 21 நாட்கள் லாக் டவுனில் இந்தியா உள்ளது.. ஊரங்கு உத்தரவு கையெடுத்து கும்பிட்டு கேட்டு கொண்ட பிரதமரின் உத்தரவினால் நாடு முழுமைக்குமான 21 நாட்கள் ஊரடங்கு நிலைமைக்குள் வந்துள்ளது.

பிரதமர்
இந்த 21 நாட்களும் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.. கட்சி வித்தியாசம் பாராமல் பிரதமரின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு வருவதுடன், மற்றவர்களும் இதுபோலவே 21 நாட்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் பாஜக தேசிய செயலாளரும், கட்சியின் மூத்த தலைவருமான எச்.ராஜாவும் இதே வேண்டுகோளை விடுத்துள்ளார்.

புத்தகங்கள்
பிரதமர் 21 நாட்கள் என்று சொன்னவுடனேயே ஒரு ட்வீட் போட்டிருந்தார் எச்.ராஜா. அதில் "இதுபோல் 1000 நண்பர்கள் (புத்தகங்கள்) இருக்கும் போது தனிமை என்பதே கிடையாது" என்று புத்தகங்களின் போட்டோக்களை போட்டிருந்தார். இன்றுகூட 21 நாட்கள் தனிமை குறித்து ட்வீட் பதிவிட்டுள்ளார்.. தமிழில் மட்டுமல்ல.. ஹிந்தியிலும் ட்வீட் போட்டு கேட்டுக் கொண்டுள்ளார் எச்.ராஜா.

சாபமல்ல... வரம்
"நோய் தடுக்க தனிமைப்படுங்கள் மனதால் ஒன்றுபடுங்கள்... தேசம் காக்க தனிமைப்படுங்கள் அன்பால் பிரபஞ்சத்தின் எல்லைகளையும் கடந்து செல்லுங்கள்... உலகம் வாழ தனிமைப்படுங்கள் உங்கள் உள்ளுக்குள் பயணப்படுங்கள்... நேர்மறையாக சிந்தித்தால் தனிமை சாபமல்ல அது ஒரு வரம்" என்று தமிழில் பதிவிட்டுள்ளார்.

ஹிந்தி பதிப்பு
ஹிந்தி பதிப்பில், "உடல்கள் தனித்திருக்கட்டும்.. மனங்கள் இணைந்திருக்கட்டும். இதன் மூலம் நோய் வராமல் தடுப்போம்... நாட்டைக் காக்க தனித்திருங்கள்... தேவைப்பட்டால் மட்டும் வெளியேறுங்கள்... உங்களுக்குள் உலவுங்கள்... உலகம் உயிர்ப்போடு இருக்க அது உதவும்... நம்பிக்கை கொண்ட மனது சாபம் அல்ல" என்று தெரிவித்துள்ளார்.

சொந்த மொழி
தமிழிலேயே தெளிவாக சொல்லிவிட்ட பிறகு எதற்காக ஹிந்தியில் பதிவு போட்டார் என தெரியவில்லை..
"கவிதை! கவிதை! இதான் சார் தமிழ்நாட்டுல இருந்தாலும் சொந்தமொழி பக்தி... காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுன்னு என்றைக்கோ தமிழன் சொல்லிட்டான்!" என்று பதிவுகள் வந்து கொண்டே இருந்தாலும், எச்.ராஜாவின் தனிமை சாபமல்ல, அது ஒரு வரம்" என்ற வரிகளுக்கு ஏராளமானோர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications