223 புதிய எம்பிக்களின் முதுகில் கிரிமினல் வழக்கு மூட்டை!
சென்னை: 17 வது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட 542 எம்.பி.க்களில் 223 பேர் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.
ஏ.டி.ஆர் என்று அழைக்கப்படும் அரசு சாரா அமைப்பான ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் மக்களவைக்கு தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் முதல் தேர்வு செய்யப்பட எம்.பி.க்கள் வரை அவர்களின் கல்வி, வருமானம், குற்றப் பின்னணி போன்றவை குறித்து ஆராய்ந்து வந்தனர்.
இவர்களின் ஆய்வின் முடிவில் இப்போது தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களில் 223 பேர் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது மக்களவைக்குத் தேர்வான இரண்டில் ஒருவர் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்து இந்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

கொலை, பலாத்காரம்
159 பேர் மீது கொலை, கடத்தல், கற்பழிப்பு போன்ற கொடுங்குற்ற வழக்குகள் உள்ளன. இந்த குற்றவழக்குகளில் பா.ஜ.க.வை சேர்ந்தவர்களில் 116 பேர் மீது வழக்குகள் உள்ளன, அதில் 87 பேர் மீது கொடுங்குற்ற வழக்குகள் உள்ளன. அதிலும் ஒருவர் மீது பயங்கரவாத வழக்கும் உள்ளது என்று இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 29 எம்.பி.க்கள் மீது வழக்குகள் உள்ளன.

19 பேர் மீது கொடுங்குற்றங்கள்
அதில் கொடுங்குற்றங்கள் செய்தவர்கள் என்ற வழக்குகள் 19 பேர் மீது உள்ளன. திமுகவை சேர்ந்த எம்.பி.க்களில் 6 பேர் மீது கொடுங்குற்ற வழக்குகள் உட்பட மொத்தம் 10 எம்.பி.க்கள் மீது வழக்குகள் உள்ளன. 2009-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட எம்.பி.க்களில் 30% பேர் மீது குற்ற வழக்குகள் இருந்தன அதில் 14% பேர் மீது கொடுங்குற்ற வழக்குகள் இருந்தன. இந்த சதவீதம் 2014-ம் ஆண்டில் அதிகரித்துள்ளது. அந்த மக்களவை தேர்தலில் 34 சதவீதம் மற்றும் 21 சதவீதம் என்று அதிகரித்தது. இவை தற்போது அதிகரித்துள்ளது. தற்போது 30 பேர் மீது கொலை வழக்குகளும், 19 பேர் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளும் உள்ளன.

கேரள எம்பிக்கள்
இந்த குற்ற வழக்குகளைப் பொறுத்த அளவில் மொத்த எம்.பி.க்களில் கேரளாவை சேர்ந்த 90 சதவிகித எம்.பி.க்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. கேரளாவுக்கு அடுத்தபடியாக பிகாரில் 82% பேர் மீதும், தெலங்கானாவில் 52% பேர் மீதும் கிரிமினல் வழக்குகள் உள்ளன. அதிகப்படியான வழக்குகளை கொண்ட எம்.பி.க்கள் உள்ள மாநிலம் கேரளா என்று கூறும் இந்த அறிக்கை கூடுதலாக இன்னொரு தகவலையும் கூறுகிறது.

மோசமான கேரளா
அதாவது இடுக்கி தொகுதியில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் வேட்பாளர் டீன் குரியகோஸ் என்பவர் மீது அதிகபட்சமாக 204 வழக்குகள் உள்ளன. இதில் 37 கொடுங்குற்றங்களும் அடங்கும். சில வழக்குகளில் இந்த எம்.பி தண்டனையும் அனுபவித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது . குற்றங்களுக்காக இப்போது தேர்வு செய்யப்பட எம்.பி.க்களில் 10 எம்.பி.க்கள் தண்டிக்கப்பட்டவர்கள். இந்த பட்டியலில் பா.ஜ.க.வினர் 5 பேர், காங்கிரசார் 4 பேர், ஒருவர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.

பெரும் கோடீஸ்வரர்கள்
தேர்வு செய்யப்பட எம்.பி.க்களில் பாஜகவை சேர்ந்த 265 பேர் கோடீஸ்வரர்கள், காங்கிரசை சேர்ந்தவர்கள் 43 பேரும், திமுகவை சேர்ந்தவர்கள் 22 பேரும் கோடீஸ்வரர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதில் முதல் மூன்று இடங்களில் காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்கள்தான் உள்ளனர். மத்தியபிரதேசம் நகுல்நாத் என்பவருக்கு ரூ.660 கோடி சொத்து உள்ளது.

எச். வசந்தகுமார்
நமது மாநிலத்தை சேர்ந்த எச்.வசந்தகுமாருக்கு ரூ.417 கோடி அளவுக்கு சொத்து உள்ளது, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு ரூ.338 கோடி மதிப்பில் சொத்து உள்ளது. கோடீஸ்வர எம்.பிக்களின் எண்ணிக்கையும் ஒவ்வொரு தேர்தல் தோறும் உயர்ந்தே வருகிறது. 2009-ம் ஆண்டில் 58% ஆக இருந்த கோடீஸ்வர எம்.பி.க்களின் எண்ணிக்கை 2019-ம் ஆண்டில் 88% ஆக அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications