25 எம்எல்ஏக்கள் பதவி நீக்கம்? ஆளுநரை நேரில் சந்தித்து முறையிட எடப்பாடி பழனிசாமி திட்டம்
சென்னை: அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளது. அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக சட்டசபையில் சமீபத்தில் நடந்த கூட்டத்தில் இது அப்பட்டமாக அம்பலமானது. அ.தி.மு.க.வுக்கு மொத்தமுள்ள 47 எம்.எல்.ஏ.க்களில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு குழுவினரும் எஸ்பி வேலுமணி தலைமையில் மற்றொரு குழுவினருமாக பிரிந்து நிற்கின்றனர். இந்நிலையில் கட்சி தாவல் சட்டத்தின்படி, 25 எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்து வருகிறார். இன்று ஆளுநரை நேரில் சந்தித்துமுறையிட எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பின்பு அதிமுக. 2 அணிகளாக உடைந்திருக்கிறது. தவெகவிற்கு ஆதரவு தெரிவிக்கும் விவகாரத்தில் அதிமுக. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஒரு அணியுமாக செயல்பட்டு வருகிறார்கள்.

சட்டமன்றத்தில் கடந்த மே 13ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக எதிர்த்து வாக்களிகும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆனால், எஸ்பி.வேலுமணி, சிவி சண்முகம், விஜயபாஸ்கர், வீரமணி உள்ளிட்ட 25 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க. அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதையடுத்து கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக சி.வி.சண்முகம், எஸ்பி.வேலுமணி உள்ளிட்ட 25 எம்.எல்.ஏ.க்களின் கட்சி பதவியை பறித்து புதிதாக 26 மாவட்ட செயலாளர்களை எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார். இதற்கு பதில் அளிக்கும் வகையில், எங்களை யாரும் கட்சியில் இருந்து நீக்க முடியாது என சி.வி.சண்முகம் தரப்பினர் தெரிவித்தனர். அதிமுக. பொதுக்குழுவை கூட்டி தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து விவாதிக்க வேண்டுமென எஸ்பி.வேலுமணி தரப்பினர் கூறி வருகிறார். இந்த 2 தரப்பினரும் அடுத்தடுத்து சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்து மனு அளித்துள்ளனர்.
இரு தரப்புக்கும் இடையே கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மோதல் நிலவி வருகிறது. மேலும், கொறடா உத்தரவை மீறி த.வெ.க. அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 25 எம்.எல்.ஏ.க்களை கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யக் கோரி கவர்னரிடம் எடப்பாடி பழனிசாமி தரப்பு மனு அளிக்க முடிவு செய்துள்ளது.
சென்னை அடையாறு பசுமை வழிச் சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்களுடன் நேற்று ஆலோசித்தார். அப்போது, அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தார்.
கவர்னர் ஆர்லெகர் சென்னைக்கு இன்று திரும்பியுள்ளார். எனவே இன்று ஆளுநரை மீண்டும் சந்தித்து தகுதி நீக்கம் குறித்து வலியுறுத்தலாம் என எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே எஸ்பி.வேலுமணி தரப்பினரும் எம்.ஆர்.சி.நகரில் உள்ள சி.வி.சண்முகம் அலுவலகத்தில் ஆதரவாளர்களுடன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.
எடப்பாடி பழனிசாமி தரப்பினர், தங்கள் குழுவில் இருந்துதான் சட்டசபை குழு தலைவர், கொறடா நியமிக்கப்பட வேண்டும் என்று சபாநாயகரிடம் மனு அளித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதுபோல சி.வி.சண்முகம் தரப்பினர், தங்கள் குழுவினருக்குத்தான் அந்தப் பதவிகளை வழங்க வேண்டும் என்று மனு அளித்துள்ளனர்.
இந்தநிலையில் சி.வி.சண்முகம், காமராஜ் மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் நேற்று தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்து அரை மணி நேரத்திற்கும் மேலாக பேசினார்கள். இந்த பேச்சுவார்த்தை குறித்து சபாநாயகர் கூறும் போது, 2 தரப்பிலும் இருந்து என்னிடம் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. மனுக்கள் அளித்து 2 நாட்கள்தான் ஆகின்றன. இன்னும் அந்த மனுக்கள் மீது பரிசீலனை நடக்கவில்லை. மனுக்களை பரிசீலித்த பிறகுதான் அவர்கள் கோரிக்கைகள் பற்றி முடிவெடுப்பேன். அதன் பின்னர் அதற்கான அறிவிப்பை வெளியிடுவேன்" என்றார்.














Click it and Unblock the Notifications