“15 நாட்களில் 266 குற்றங்கள்!”.. விஜய் அரசை கடுமையாக தாக்கிய நயினார் நாகேந்திரன்
சென்னை: தமிழக அரசியலில் மீண்டும் சட்டம் - ஒழுங்கு விவாதம் வெடித்துள்ளது. "விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற 15 நாட்களிலேயே மாநிலத்தில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன" என்று குற்றஞ்சாட்டியுள்ள தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"தூய அரசியல்" என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்த விஜய் அரசின் முதல் 15 நாட்களிலேயே தமிழகத்தில் 266 குற்றச்சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சம்பவங்கள் அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் பல பகுதிகளில் சிறுமிகள் மற்றும் பெண்கள் மீதான தொடர்ச்சியான பாலியல் கொடுமை சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், "இதுதானா மாற்றத்துக்கான ஆட்சி?" என்று கேள்வி எழுப்பியுள்ளார் தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன். விஜய் அரசு பொறுப்பேற்ற பின்னர் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: முதல்வர் விஜய் தேர்தல் பிரசாரத்தின் போது, தான் ஒரு துாய சக்தி என்றும், மற்ற கட்சியினர் தீய சக்தி என்றும் பிரசாரம் செய்தார்.
தான் சாடிய தி.மு.க., கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன், முதல்வர் பதவிக்கு வந்தார். அ.தி.மு.க.,வில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,க்களையும் திருட்டுத்தனமாக அரசியல் புரோக்கர்களை வைத்து, குதிரை பேரம் பேசி, சட்டசபையில் ஜனநாயகத்திற்கு விரோதமாக தன் பலத்தை நிரூபித்தார்.
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை ராஜினாமா செய்ய வைத்து விட்டு, தன் கட்சியிலும் சேர்த்து கொண்டார். அந்த தொகுதிகளில் மீண்டும் தேர்தல் நடந்தால், மக்களின் வரிப்பணம் தானே வீணாகிறது என்று, முதல்வர் விஜய் அறியாமல் இருப்பது, அவரது அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது.
விஜய் ஆட்சிக்கு வந்த, 15 நாட்களில் தமிழகத்தில், 266 குற்றச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதில், 45 படுகொலைகள், 66 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், 74 பாலியல் வன்கொடுமைகள், 82 ஊழல் குற்றங்கள் நடந்துள்ளன.
கடந்த இரு தினங்களிலேயே, திருவண்ணாமலையில், 14 வயது சிறுமி, கோவையில், 10 வயது சிறுமி, விழுப்புரம் வண்டிபாளையத்தில், 11 வயது சிறுமி, மதுரையில் பத்தாம் வகுப்பு மாணவி, நாகையில், 80 வயது மூதாட்டி ஆகியோர் கொடூர பாலியல் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். இதற்கெல்லாம் பதில் சொல்வரா முதல்வர்? என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications