“ஹெவி ஃபைட்”.. 1.56 லட்சம் இடங்களுக்கு 1.78 லட்சம் பேர் போட்டி.. இன்று 2ம் கட்ட பொறியியல் கலந்தாய்வு
சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு நேற்று நிறைவடைந்த நிலையில் இன்று 2 ஆம் கட்ட கலந்தாய்வு தொடங்குகிறது.
கடந்த மே 15 முதல் ஜூன் 9ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு நடைபெற்றது. இதற்கான ரேண்டம் எண் மற்றும் தர வரிசை பட்டியல் அடுத்தடுத்து வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து பொறியியல் கலந்தாய்வுக்கான தேதியை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடந்த மாதம் வெளியிட்டார்.

தமிழ்நாட்டில் 430 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1.56 லட்சத்திற்கும் அதிகமான இடங்களில் சேர 1.78 லட்சம் மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க உள்ளனர். இதில் சிறப்பு பிரிவினருக்கு ஜூலை 22 ஆம் தேதி முதல் ஜூலை 26ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற்றது. அதை தொடர்ந்து ஜூலை 28 ஆம் தேதி பொதுப்பிரிவினருக்கான முதல் கட்ட கலந்தாய்வு தொடங்கியது.
3 கட்டங்களாக நடைபெறும் இந்த கலந்தாய்வில் நேற்று முதல் கட்ட கலந்தாய்வு நிறைவடைந்தது. இந்த நிலையில் இன்று 2 ஆம் கட்ட பொறியியல் கலந்தாய்வு தொடங்குகிறது. இந்த 2 ஆம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் செப்டம்பர் 3 ஆம் தேதி வரை 3வது கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது.
இதற்கு தமிழ்நாட்டில் பொறியியல் கலந்தாய்வு 4 சுற்றுகளாக நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வு 3 சுற்றுகளாக நடத்தப்பட உள்ளது. செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் பொறியியல் கலந்தாய்வு நிறைவடைய உள்ளது. இந்த கலந்தாய்வில் கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலாக 3,100 பொறியியல் இடங்கள் உள்ளன. இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் ECE Advanced Technology, ECE Design and Technology ஆகிய 2 புதிய படிப்புகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.












Click it and Unblock the Notifications