திருப்பதி, பழனிக்கு செம டஃப்.. முதல் நாளிலேயே நன்கொடையை அள்ளிக் குவித்த அயோத்தி ராமர்! இவ்வளவா?
அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலில் நேற்று காலை முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். முதல் நாளிலேயே ராமர் கோவிலுக்கு 3 கோடியே 17 லட்சம் நன்கொடை பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா ஜனவரி 22ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், திரையுலக பிரபலங்கள் என இந்தியாவின் விவிஐபிக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொழிலதிபர் முகேஷ் அம்பானி, நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், சச்சின் டெண்டுல்கர் என நூற்றுக்கணக்கான பிரபலங்கள் பங்கேற்றனர்.

அயோத்தி ராமர் கோவிலில் நேற்று முதல் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டது. காலை 6 மணிக்கு அயோத்தி ராமர் கோவில் நடை திறக்கப்பட்டது. ஆனால், முதல்நாள் சூரிய உதயத்தில் சாமி தரிசனம் செய்வதற்காக அதிகாலை முதலே கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். ஆறு மணிக்கு நடை திறந்ததும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
பக்தர்கள் நேற்று முழுவதும் வந்து கொண்டே இருந்தனர். நேற்று இரவு 10 மணி வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் கூட்டம் அலைமோதிய நிலையில், நேற்று முதல் நாளில் மட்டும் ஐந்து லட்சம் பேர் சாமி தரிசனம் செய்தனர். இன்றும் லட்சக்கணக்கானோர் அயோத்தி ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
அயோத்தி ராமர் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்களும், பிரபலங்களும் நன்கொடைகளை வாரி வழங்கியுள்ளனர். ராமர் கோவில் அறக்கட்டளை வெளியிட்டுள்ள தகவலின்படி, ஜனவரி 23ஆம் தேதி நேற்று மட்டும், 5 லட்சம் பக்தர்கள் கோவிலுக்கு வந்ததாகவும், 3 கோடியே 17 லட்சம் ரூபாய் நன்கொடை பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications