தலைக்கேறிய போதை.. சென்னையில் நடுரோட்டில் ரகளை செய்த பெண்கள்.. பிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்த போலீஸ்!
சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் போதை தலைக்கேறிய நிலையில் 3 பெண்கள் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் போதை தலைக்கேறிய நிலையில் 3 பெண்கள் சாலையில் செல்பவர்களிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். பார்ப்பவர்களின் முகம் சுழிக்கும் வகையில் நடந்துகொண்ட அந்த 3 பெண்களையும் பிடித்து விசாரித்த பெண் போலீசார் அவர்களை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் நேற்று இரவு 3 பெண்கள் திடீரென ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
சாலையில் நடந்து செல்பவர்களிடம் வீண் வம்பிற்கு செல்வது போல பெண்கள் ரகளை செய்ததால் அவ்வழியாக சென்றவர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து உடனடியாக அப்பகுதியில் உள்ள மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

3 பெண்களிடம் போலீஸ் விசாரணை
இதையடுத்து விரைந்து வந்த போலீசார் 3 பெண்களையும் பிடித்து விசாரணை நடத்தினர். சென்னை திருவல்லிக்கேணியில் நேற்று இரவு இந்த நிகழ்வால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் பற்றிய முழு விவரம் வருமாறு:- திருவல்லிக்கேணி வாலாஜா சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இரவு நேரங்களில் கூட வாகனப் போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். சென்னை மெரினா கடற்கரைக்கு செல்லும் காமராஜர் சாலையை இணைக்கும் இந்த வாலாஜா சாலையில் வாகன போக்குவரத்து மட்டும் இன்றி மக்கள் நடமாட்டமும் பின்னிரவு வரை இருக்கும்.

நடு ரோட்டில் 3 பெண்கள் ரகளை
குறிப்பாக சாலையோர கையேந்தி பவன்களில் இரவு சுமார் 11 மணி வரை பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருப்பதை காண முடியும். இந்த நிலையில், நேற்று இரவு வாலாஜா சாலையில் 3 பெண்கள் மது போதையில் அவ்வழியாக செல்பவர்களிடம் ரகளையில் ஈடுபட்டதை காண முடிந்தது. முகம் சுழிக்கும் வகையில் பெண்கள் நடந்து கொள்வதோடு ரகளையில் ஈடுபடுவதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்தது.

போதை தலைக்கேறிய நிலையில்..
இந்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த பெண் போலீசார், மூன்று பெண்களையும் அழைத்து பேசினர். அவர்களை சமாதானப்படுத்தும் வகையில் பெண் போலீசார் பேசிக்கொண்டு இருந்தனர்.
ஆனால், போதை தலைக்கேறிய நிலையில், இதையெல்லாம் பொருட்படுத்தாத அந்த 3 பெண்களும் என்ன செய்கிறோம் என்று தெரியாத அளவிற்கு ரகளை செய்தனர். இதனால், 3 பெண்களையும் பிடித்த பெண் போலீசார், மது அருந்தியிருப்பதை உறுதி செய்யும் சோதனையை செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

பெற்றோர்களிடம் ஒப்படைத்த போலீசார்
விசாரணையில், 3 பெண்களும் கண்ணகி நகர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் திருவல்லிக்கேணி பகுதியில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் உணவு பரிமாறும் வேலைக்காக வந்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து மூன்று பெண்களையும் கண்ணகி நகரில் உள்ள பெற்றோர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர். இதற்கிடையே மது அருந்தி விட்டு ரகளையில் ஈடுபட்ட பெண்கள் மீது திருவல்லிக்கேணி காவல் நிலைய போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications