சென்னை ஓஎம்ஆர் சாலையில் பல ஆண்டு பிரச்சனைக்கு தீர்வு.. ஒன்றல்ல மூன்று மாங்காய்.. அரசு செம்ம
சென்னை: சென்னை ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க இரண்டு மேம்பாலங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மெட்ரோ ரயில் நிறுவனம் 350 கோடியை ஒதுக்க முடிவெடுத்துள்ளது. மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஓஎம்ஆர் சாலையில் எந்த இடங்களில் மேம்பாலங்கள் அமைகிறது என்பதை பற்றி பார்ப்போம்.
சென்னையில் மிகவும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சாலைகளில் ஒன்று ஓஎம்ஆர் சாலை. ஏராளமான ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ள ஓஎம்ஆர் சாலையில் லட்சக்கணக்கானோர் வேலைக்கு செய்கிறார்கள். இதனால் காலையும் மாலையும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம் பகுதியில் உள்ள ஓஎம்ஆர் சாலையை கடந்து அடையாறுக்கோ, வேளச்சேரிக்கோ காலை மற்றும் மாலை நேரத்தில் வருவது என்பது மிகவும் சவாலானதாக உள்ளது.

சென்னை ஓஎம்ஆர் சாலையில் தற்போது மெட்ரோ ரயில் பணிகள் நடப்பதே மிக கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக உள்ளது. சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளில் மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரை செல்லும் மெட்ரோ வழித்தடத்தில் சுமார் 20 கிமீ தூரம் பாதை, ஓஎம்ஆர் சாலை வழியாகவே செல்கிறது. இதனால் சோழிங்கநல்லூர் துரைப்பாக்கம் சந்திப்பில் நெரிசல் அதிகமாக உள்ளது. ஒரு பேருந்து சென்றாலே , அதை முந்தி செல்ல முடியாத நிலை ஏற்படுவதால் சாலை, அடிக்கடி ஸ்தம்பிக்கிறது.
இது ஒருபுறம் எனில், மெட்ரோ ரயில் பணிகள் முடிந்தாலும். அங்கு நெரிசல் குறைய வாய்ப்பு இல்லை என்ற நிலையே உள்ளது. ஏனெனில் சோழிங்கநல்லூரைச் சுற்றி வெறும் 10 கிமீ சுற்றளவில் வசிக்கும் மக்கள் தொகை மிகமிக அதிகம். தமிழ்நாட்டில் எங்கும் இல்லாத அளவிற்கு கார்ப்பரேட் நிறுவனங்களும், ஐடி நிறுவனங்களும் அமைந்துள்ளன. ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் வேலைக்கு சென்று வருவதால் இந்த நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதையடுத்து போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் துரைப்பாக்கம் சந்திப்பு மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய இரண்டு மேம்பாலங்களை அமைக்க முடிவு செய்துள்ளது. இதற்காக 350 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மெட்ரோ ரயில் திட்டத்தில் சில மாற்றங்களும் செய்யப்பட உள்ளது. அதே நேரம் இந்த பணிகள் காரணமாக மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரை செல்லும் மெட்ரோ வழித்தடத்தில் ரயில்கள் ஓடுவதற்கு சில கால தாமதம் ஏற்படும் என தெரிகிறது.
இதனிடையே சென்னை ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க இரண்டு மேம்பாலங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ள அறிவிப்பினை கேட்டு வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது ஒரு புறம் எனில் , ஏற்கனவே பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனை சந்திப்பிலும் ரேடியல் சாலையில் செல்வோருக்கு ஏதுவாக மேம்பாலம் அமைக்க முடிவு செய்த தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்திருந்தது. இதன்படி 3 மேம்பாலங்களும் அமைக்கப்பட்டால் ஓஎம்ஆர் சாலையில் பயணிப்போரின் பல ஆண்டு பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துவிடும்.












Click it and Unblock the Notifications