"வீட்டை விட்டு போக முடியலையே" முனியம்மாளிடம் கலங்கிய மீன் வியாபாரி.. ஒரே குடும்பத்தில் 3பேர் தற்கொலை
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்
சென்னை: வியாசர்பாடியில் கடன் தொல்லை மற்றும் சொந்த வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டிய நிலைமை வந்ததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த தம்பதி கரிகாலன் - முனியம்மாள். கரிகாலன் ஒரு மீன் வியாபாரி.. முனியம்மாளுக்கு 46 வயதாகிறது.. முனியம்மாளின் அண்ணன் ஆறுமுகம்.. இவருக்கு 50 வயதாகிறது.. ஆனால் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவராம்.
கரிகாலன் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.. மகளுக்கு 5 மாசத்துக்கு முன்புதான் கல்யாணம் முடித்தார்.. இந்த கல்யாணத்துக்காக தன்னுடைய வீட்டை 7 லட்ச ரூபாய் வரை அடமானம் வைத்து கடன் வாங்கினார்.. கல்யாணம் முடிந்ததுமே கரிகாலனுக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.
அதனால் வீட்டை விற்று கடனை அடைக்க முடிவு செய்தார்.. ஆனால் இதற்கு கரிகாலனின் மகன் ஹரிஹரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்... வீட்டை விற்கவே கூடாதுஎன்று சொன்னதுடன், சண்டை போட்டுக் கொண்டு வீட்டை விட்டும் போய்விட்டார்.
எனினும், கடன்தொல்லை நெருக்கவும், இந்த 10 நாளாக வீட்டை விற்பதும், வாங்கிய கடனை அடைப்பதுமாக கரிகாலன் இருந்துள்ளார்... இறுதியில் தன் வீட்டை விட்டு வெளியேறும் சூழலும் வந்தது.. ஆனால் இவ்வளவு காலம் வாழ்ந்த வீட்டை விட்டு வெளியேற முடியாமல் கரிகாலன் தம்பதி தவித்தனர்.. அதனால் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தனர்.
அதன்படியே தம்பதி இருவரும் அடுத்தடுத்து தூக்கு போட்டு தொங்கிவிட்டனர். தகவலறிந்து சென்ற எம்கேபி போலீசார் வீட்டிற்குள் நுழைந்தபோது, மனவளர்ச்சி குன்றிய ஆறுமுகம் விஷம் அருந்தி ஹாலில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ந்தனர். 3 பேரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.