தமிழகம் முழுக்க 3 ஆறுதல் விஷயம் இருக்கு.. கொரோனா எண்ணிக்கையை பார்த்து பயம் தேவையில்லை
சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 3509 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். முதலில் ஆயிரத்துக்கு கீழே, பிறகு 2 ஆயிரத்துக்கு மேலே என பதிவான கொரோனா எண்ணிக்கை, இப்போது, முதல் முறையாக மூவாயிரத்தை தாண்டியுள்ளது.
இந்த எண்ணிக்கை அச்சமூட்டுவதாக இருக்கிறது. குறிப்பாக, பிற மாவட்டங்களின், கொரோனா பாதிப்பு கூட்டுத் தொகை, கிட்டத்தட்ட சென்னைக்கு ஈடாக பரவி வருகிறது.
ஐந்தாவது ஊரடங்கு காலகட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகள் தளர்வு கொண்டுவரப்பட்டுள்ளதால் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான்.
ஆனால், சிகிச்சை அளிப்பதற்கு படுக்கை வசதி இல்லை என்ற குற்றச்சாட்டுகள் உருவான நிலையில், சென்னையில் கடும் ஊரடங்கு இப்போது அமலுக்கு வந்துள்ளது.

பிற மாவட்டங்களில் தளர்வு
மதுரையில் சில இடங்கள், வேலூரின் சில இடங்கள் போன்றவற்றில் ஊரடங்கு தளர்வுகள் இருக்கின்றன. ஆனால், பிற மாவட்டங்களில் நிறையவே தளர்வுகள் உள்ளன. ஏதோ சென்னைக்கான வைரஸ் என்ற நினைப்பில், மக்கள், முகக் கவசம் கூட அணியாமல் நடமாடுவதை பார்க்க முடிகிறது. எனவே வரும் நாட்களில் பிற மாவட்டங்களில், கோரோனோ பாதித்தவர் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

சென்னை சேஃப்
சென்னையில், தினமும், சுமார் 9 ஆயிரம் முதல், 10 ஆயிரம் பேருக்கு தொடர்ந்து பரிசோதனை செய்யப்படுகிறது. அதை வைத்து பார்த்தால் சென்னையில் கொரோனா வைரஸ் பரவல் இரட்டிப்பு மடங்கு வேகத்தில் செல்லவில்லை, நிலையானதாக இருக்கிறது என்பது ஒரு நல்ல செய்தி. ஏனெனில் அங்கு 1,500 என்ற அளவை ஒட்டிதான் தினமும் பாதிப்பு பதிவாகி வருகிறது. இன்றும் கூட 1834 என்ற அளவில் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.

இறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை
மற்றொரு நல்ல விஷயம் இறப்பு சதவீதம் குறைவாக இருக்கிறது. தமிழகத்தில் பரவலாக இறப்பு விகிதம் பெருமளவுக்கு அதிகரிக்கவில்லை. தினமும் 40 அல்லது 30க்கு மேல் என்ற அளவில்தான் இருக்கிறது. சமூகத்தில் நிறைய பேருக்கு நாம் கொரோனா பரிசோதனை செய்யவில்லை என்று வைத்துக்கொண்டால், பாதிக்கப்பட்டோர் பலரும் இந்நேரம் பலியாக வாய்ப்பு இருந்தது. ஆனால் அப்படி நடக்கவில்லை. ஒருவேளை அப்படி பரிசோதனைக்கு உட்படாதவர்கள் கொரோனா பாதிப்பு பலியாகுவதாக இருந்தால் தினமும் இறப்பு எண்ணிக்கை நூற்றை தாண்டி பதிவாகியிருக்க வேண்டும். அது போல நடக்கவில்லை. எனவே சமூகத்தில் இது பெருந்தொற்றாக பரவவில்லை என்பதும் ஒரு நல்ல செய்தி.

டிஸ்சார்ஜ் விகிதம்
பரிசோதனையின் அளவு அதிகரித்து இருக்கிறது அதேநேரம், இறப்பு விகிதம் குறைவாக இருக்கிறது என்பது நல்ல செய்திகள். எனவே, இத்தாலி போன்று, அமெரிக்கா போன்று பெருவாரியான மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள். டிஸ்சார்ஜ் விகிதமும் சிறப்பாக இருக்கிறது. தமிழகத்தில் இன்று மட்டும் 2236 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை, 39,999 பேர் குணமடைந்துள்ளனர்.

சித்த மருத்துவம்
அலோபதி மருத்துவம் மட்டுமின்றி, சித்த வைத்திய முறைகளும் இதற்குப் பயன்படுகின்றன. சென்னையில் இரண்டாவது சித்த மருத்துவ மையம் துவங்கப்பட்டுள்ளது. இப்படி நிறைய பேர் குணமடைந்து அதன் மூலமாக அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படுவதால், அவர்கள் கொரோனா பாதிப்புக்கு உள்ளாக மாட்டார்கள். இதன் மூலமாக பிறருக்கும் பரப்ப மாட்டார்கள். எனவே, கொரோனா பரவல் சங்கிலி அறுத்தெறியப்படும். அதுவரை மற்றவர்கள் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது, என்பதே மருத்துவ வல்லுநர்கள் கருத்து.












Click it and Unblock the Notifications