அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சாதி பாகுபாடு.. 3 பேராசிரியர்கள் நீலகிரிக்கு அதிரடி டிரான்ஸ்பர்
சென்னை: தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சாதி பாகுபாடு காட்டிய 3 பேராசிரியர்களை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி கல்வி இயக்கம் தகவல் தெரிவித்துள்ளது. மாணவர்களிடையே சாதி பாகுபாடு காட்டி மோதல்களை உருவாக்கும் வகையில் செயல்பட்டதாக 3 பேராசிரியர்கள் மீது புகார் தெரிவிக்கிப்பட்டுள்ளது.
சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதியார் பாடினாலும் மாணவர்களிடையேயும், பள்ளி, கல்லூரிகள், பணியிடங்களில் ஜாதி பாகுபாடு இருந்து கொண்டுதான் இருக்கிறது. கடந்த மாதம் நாங்குநேரியில் பள்ளி மாணவனையும், அவனது தங்கையையும் வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய வழக்கில் பள்ளி மாணவர்கள் 6 பேரை கைது செய்தனர். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் சாதி ரீதியான பிரச்சினைகள் மாணவர்களிடையே தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. இது போன்ற சம்பவம் தன்னை வேதனைக்குள்ளாக்குவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.

இதனிடையே கல்லூரி போராசிரியர்கள் மாணவர்களிடையே சாதி பாகுபாடு காட்டுவதாக புகார் எழுந்தது. சிவகங்கை அரசு கலைக் கல்லூரியில் சாதி பாகுபாடு நிலவுவதாக வந்த புகாரை அடுத்து அதிகாரிகள் குழுவினர் விசாரணை நடத்தினர். அந்த கல்லூரியில் பேராசிரியர் கிருஷ்ணன் சாதிபாகுபாடு பார்ப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்கள் புகார் அளித்தனர்.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய குழுவினர், சில பேராசிரியர்கள் சாதி பாகுபாடு பார்ப்பதாக கூறினர். இதையடுத்து, கல்லூரி முதல்வர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி பேராசிரியர் கிருஷ்ணன், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் உண்மைத்தன்மை குறித்து, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர், கோட்டாட்சியர் ஆகியோர் கல்லூரிக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
அதிகாரிகளின் விசாரணையை அடுத்து அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், சாதி பிரிவினை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக 3 பேராசிரியர்களை, பணியிட மாற்றம் செய்து கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வியாசர்பாடி கல்லூரி பேராசிரியர் ரவி மயிசின், சிவகங்கை கல்லூரி பேராசிரியர் கிருஷ்ணன், கும்பகோணம் கல்லூரி பேராசிரியர் சரவணபெருமாள் ஆகியோர் நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்












Click it and Unblock the Notifications