சென்னையில் அதிகாலையில் ஷாக்.. பலத்த சத்தத்துடன் திடீரென இடிந்து விழுந்த கடைகள்.. மக்கள் அதிர்ச்சி
சென்னை: சென்னை மாநகராட்சியில் உள்ள பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வரும் நிலையில், நேற்று அதிகாலை சிந்தாதிரிப்பேட்டையில் மழைநீர் வடிகால் பணிக்கு பள்ளம் தோண்டியபோது அருகில் இருந்த 3 கடைகள் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையின் பல்வேறு சாலைகளில் வாகனம் ஓட்டி செல்வோருக்கு இரண்டு விஷயம் நன்றாக தெரியும். ஒன்று சாலைகளில் மெட்ரோ ரயிலுக்காக பள்ளம் தோண்டி, ஒரு பாதை சாலையை அடைத்து வைத்திருப்பார்கள். இல்லாவிட்டால் சாலையில் மழைநீர் வடிகாலுக்காக தோண்டிருப்பார்கள்.

இதுதான் இன்றைய எதார்த்தம். அதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது.காலையில் அலுவலகம் செல்வோரும், மாலையில் அலுவலகம் முடிந்து வீடு திரும்புவோரும் நொந்து போய்விடுவார்கள்.
இப்படியான சூழலில் மழைநீர் வடிகால் பணியின் போது கடைகள் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதனால் சாலையில் 10 மணி நேரம் போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க வேண்டும் என்கிற முனைப்பில் சென்னை மாநகராட்சி, பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை செய்து வருகிறது. இதனால், இரவு, பகல் பார்க்காமல் ஊரியர்கள் வேலை செய்து வருகிறார்கள். பொதுமக்களின் நலன் கருதி மழைநீர் வடிகால் நடைபெறும் பகுதிகளை சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
சனிக்கிழமை இரவு சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் மாநகராட்சி ஊழியர்கள் மழைநீர் வடிகால் பணிக்காக பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஞாயிறு அதிகாலை 3.30 மணியளவில் அருணாச்சலம் சாலையில் பொக்லைன் எந்திரம் மூலம் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்காக சாலையின் ஓரத்தில் பள்ளம் தோண்டினார்கள். அப்போது அருகில் இருந்த 3 கடைகளின் முன்புற பகுதிகள் பலத்த சத்தத்துடன் திடீரென இடிந்து விழுந்தன. இதனால் பள்ளம் தோண்டும் பணி நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்கள். உடனடியாக அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டார்கள். இதையடுத்து சிந்தாதிரிப்பேட்டை போலீசாரும் விரைந்து வந்து அப்பகுதியில் போக்குவரத்தை தடை செய்தனர். இதேபோல, இடிபாடுகளை அகற்றும் பணியில் தீயணைப்புத்துறை வீரர்கள் ஈடுபடுத்தினார்கள்.
அதிகாலையில் நடைபெற்ற இச்சம்பவத்தால் பொதுமக்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சுமார் 10 மணி நேரத்துக்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதி அடைந்தனர்.












Click it and Unblock the Notifications