அதிரடியான 3 திட்டங்கள்!.. பெண்களை முழுமையாக ஈர்த்த திமுக!..பலன்கள் என்ன?
சென்னை: பெண்கள் உரிமையில் திமுக அரசு பல முன்னேற்றங்களைச் செய்துள்ளது. அன்று பெண்களுக்குச் சொத்துரிமையை ஏற்படுத்தித் தந்தார் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி.
அதற்கு ஒருபடி மேலே சென்று பிறப்பால் அனைவரும் சமம். ஆண், பெண் பேதமில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக 3 பெண்களை அர்ச்சகர்களாக நியமித்து, 5 பெண்களை ஓதுவார்களாக பணியில் அமர்த்தி அரசாணை வழங்கி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

இது திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் நடந்தேறிய அதிரடி மாற்றம். முதலில் பெண்களுக்குக் கல்வியை உறுதி செய்வது, அரசியல் ரீதியாகப் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்ய 33% இடஒதுக்கீட்டை ஏற்படுத்தித் தருவது, அவர்களின் பயணத்தை மிக எளிமையாக மாற்றி அமைப்பது, பின்னர் பிறப்பின் அடிப்படையில் அவர்களைப் பேதம் பார்க்காமல் செய்வது என இவை அனைத்திலும் முழு மூச்சாக வெற்றி கண்டுள்ளது திமுக.
பெண்கள் உயர் கல்வியை உறுதி செய்ய 'புதுமைப் பெண் திட்டம்'. பயணத்தை எளிமையாக்க "கட்டணமில்லா பேருந்து சேவை திட்டம்'. குடும்பத் தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்'. இவை மூன்று திட்டங்களும் பெண்களை முழுமையாக திமுக பக்கம் திருப்பி இருக்கிறது.
பெண்களை மையமாக வைத்து திமுக பல திட்டங்களை உருவாக்குவது ஏன்? அதற்கான காரணம் என்ன? அக்கட்சி மகளிர் மாநாட்டை நடத்த உள்ள இந்தத் தருணத்தில் ஒரு சின்ன ரீவைண்ட் அடித்துப் பார்த்தோம்.

திமுகவும் பெண்கள் உரிமையும் என்பது பற்றிப் பேச முன்வந்தார் சாஹித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் இமையம்.
"பெண்கள் உரிமைக்காக இந்த இயக்கம் நிறைய எழுதி இருக்கிறது. மேடைகளில் குரல் கொடுத்திருக்கிறது. இலக்கியங்கள் வழியே நிறையப் பேசி இருக்கிறது. அத்துடன் நிற்காமல் ஆட்சிக்கு வந்த பிறகு அதற்கு சட்டரீதியான உரிமைகளை இந்த இயக்கம் கொடுத்தும் இருக்கிறதுஎன்றபடி பேசத் தொடங்குகிறார் எழுத்தாளர் இமையம்.
"குறிப்பாகச் சொன்னால், பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை என்ற சட்டத்தை திமுகதான் கொண்டுவந்தது. இது மிகமிக முக்கியமான மாற்றம். அதற்கு முன்னால் இருந்த ஆட்சியிலிருந்த எந்த அரசும் கொண்டுவராத சட்டம்.

அதன்பிறகு உள்ளாட்சித்துறைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு என்பதை திமுகதான் சட்டமாக்கியது. இந்திய அளவில் மிக முன்னோடியான திட்டம் இது.
மிகச் சரியாகச் சொன்னால், பெரியார், அண்ணா, கலைஞர் எனப் பலரும் பெண்களின் வளர்ச்சிதான் சமூகத்தின் வளர்ச்சி என்பதை வலியுறுத்தி வந்துள்ளனர்.
பெண்கள் படிக்க வேண்டும் என்று முதன்முதலாகக் குரல் கொடுத்தது, பெண்களுக்காகத் தனிப் பள்ளிகளைத் தொடங்கியது, அவர்களுக்காகத் தனி விடுதிகளை உருவாக்கியது, அதைப்போன்று பெண்களுக்கு என்று தனிக் கல்லூரிகளைத் தொடங்கியது, அதையும் தாண்டி பெண்கள் படிப்புக்காக ஊக்கத்தொகை அளித்தது எனத் திட்டத்தை அறிவித்தது என இப்படிப் பல வழிகளில் பெண் கல்விகளுக்கு முன்னுரிமை கொடுத்துள்ளது திமுக அரசு.

திமுகவின் தாய்க் கழகமான நீதிக்கட்சி தொடங்கி, பின்னர் திராவிடர் கழகம் என மாறி இறுதியாக திமுகவாக உருவாகியதுவரை தொடர்ந்து பெண் உரிமையை இந்த இயக்கம்தான் பேசி வந்துள்ளது.
சமூகத்தில் சரி பாதியாக இருக்கும் அவர்களைச் சமமாகப் பாவிக்கவேண்டும் என்ற கருத்தை முன்வைத்ததே இந்தத் திராவிட இயக்கங்கள்தான். அப்படி கொள்கையாக முன்வைத்த பல விசயங்களை ஆட்சிக்கு வந்ததும் சட்டமாக்கித் தந்தது இந்தத் திமுகதான்.
எட்டாம் வகுப்பு வரை படித்தால், அதற்கு ஒரு ஊக்கத்தொகை. 12 ஆம் வகுப்பு வரைப் படித்தால் அதற்கு ஒரு ஊக்கத்தொகை. இப்படி பெண் கல்வியை எந்தெந்த வழிகளில் ஊக்குவிக்க முடியுமோ, அந்த வழிகளில் எல்லாம் ஊக்குவித்தது திமுக.

இதன்மூலம் பலனடைந்துதான் இன்றைக்குப் பலதுறைகளில் பெண்கள் வேலைகளில் அமர்ந்துள்ளனர். மற்ற மாநிலங்களைவிட, தமிழ்நாட்டில் உயர்கல்விக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது.
தமிழ்நாட்டில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பெண்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்ற சட்டத்தை முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிதான் கொண்டுவந்தார். இந்தியாவில் இப்படி ஒரு சட்டம் வேறு மாநிலங்களில் இருப்பதாகத் தெரியவில்லை.
அதைப்போலச் சத்துணவுப் பணியாளர்களில் பெண்களை மட்டுமே நியமிக்கவேண்டும் என்ற சட்டத்தை அவர் கொண்டுவந்தார்.

பொருளாதாரரீதியாக தன்னெழுச்சியான ஒரு சுதந்திரத்தைப் பெண்கள் பெறவேண்டும் என்பதற்காக மகளிர் சுய உதவிக்குழுக்களை உருவாக்கியதும் அவர்தான்.
ஒரு குடும்ப பொருளாதாரத்தைப் பெண்களால் மட்டுமே உயர்த்த முடியும். அவர்களின் பொருளாதாரம் பாதிக்கும் போது அது குடும்பத்தைப் பாதிக்கும். குடும்பத்தைப் பாதித்தால், அது சமூகத்தைப் பாதிக்கும் என்ற பார்வையை உணர்ந்ததால், சுய உதவிக்குழுக்களை உருவாக்கித் தந்தார் அவர்என்று சொல்லும் எழுத்தாளர் இமையம், 2 ஆயிரம் ஆண்டுகால தமிழ்நாட்டு அரசியலில் பெண்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளித்த அரசு வேறு இல்லை என்றும் அடித்துச் சொல்கிறார்.
முதல்வர் ஸ்டாலின் இப்போது கொண்டுவந்துள்ள புதுமைப் பெண்திட்டம் என்பதே பெண்களின் இடைநிற்றலைத் தடுக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் என்றும் 1 கோடியே 16 லட்சத்து 342 மாணவிகள் இதன் மூலம் பலன் பெற்று உயர்கல்வி பெற்றுள்ளனர் என்றும் விளக்கம் அளிக்கிறார்.

"அதாவது இந்தப் புதுமைப் பெண் திட்டம் வந்த பிறகு, கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 27% மாணவிகளின் சேர்க்கை கூடியுள்ளது என ஒரு புள்ளிவிவரம் கிடைத்துள்ளது" என்கிறார் இமையம்.

அன்று மு.கருணாநிதி குடும்ப பொருளாதாரத்தை உயர்த்த மகளிர் சுய உதவிக்குழுக்களை ஏற்படுத்தித் தந்தார். இன்று அதே குடும்பப் பெண்களின் கையில், மாதம் 1000 ரூபாய் கிடைக்கும்படி உறுதி செய்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். கிட்டத்தட்ட ஒரு கோடியே 6 லட்சத்து 55 ஆயிரம் பேருக்கு இந்த ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தைக் கர்நாடகா பின்பற்றத் தொடங்கி இருக்கிறது. வரும் தேர்தலில் இது இந்தியா முழுமைக்கும் பரவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
சில தினங்களுக்கு முன்பாக 500 பெண்களுக்கு ஆட்டோக்களை வழங்கி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இவர்கள் அனைவருக்கும் அரசு சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு, அரசு செலவில் உரிமமும் எடுத்து தரப்பட்டு, இறுதியாக 1 லட்சம் மானிய விலையில் ஆட்டோக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 2 திருநங்கைகளும் பயனாளிகளாக இணைக்கப்பட்டுள்ளனர் என்பது கூடுதல் சிறப்பு மட்டும் அல்ல; வரலாற்றுச் சிறப்பு.













Click it and Unblock the Notifications