ஆஹா.. சென்னை மெட்ரோ சுரங்க ரயில் நிலையங்களில் அடுத்ததாக இந்த வசதியும் இனி வரப்போகுது!
சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக சென்னையில் சென்ட்ரல், எழும்பூர், நேரு பூங்கா, நந்தனம், உட்பட 19 சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களில் 32 ஏடிஎம்கள் அமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிகளை கவரும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் 50 சதவீத கட்டண சலுகை அறிவித்தது.
இந்நிலையில் சுரங்கப்பாதையில் உள்ள 19 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் புதியதாக 32 ஏடிஎம் இயந்திரங்களை அமைக்க சென்னை மெட்ரோ முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக டெண்டரை வெளியிட்டுள்ளது.

அடிப்படை வசதி
இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தமிழ் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ‘‘மெட்ரோ ரயில் பயணிகளுக்கு சிறப்பான வசதி அளிப்பதற்காக மெட்ரோ ரயில் நிலையங்களில் அடிப்படை வசதியையும் மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

19 ரயில் நிலையங்கள்
இதன் ஒருபகுதியாக ஆலந்தூர், கோயம்பேடு உட்பட 13 மெட்ரோ ரயில் நிலையங்களில் பல்வேறு வங்கிகள் மூலம் ஏடிஎம் வசதி ஏற்படுத்தி உள்ளோம். அடுத்தபடியாக சுரங்கப் பாதையில் அமைக்கப்பட்டுள்ள 19 மெட்ரோ ரயில் நிலையங்களின் மேற்பகுதிகளில் ஏடிஎம்கள் மற்றும் பணம் செலுத்தும் இயந்திரங்கள் நிறுவப்பட உள்ளது.

சென்ட்ரல் எக்மோர்
இதன்படி ஷெனாய் நகர், பச்சையப்பா கல்லூரி, சைதாப்பேட்டை, நந்தனம், எல்ஐசி, கீழ்பாக்கம், நேரு பூங்கா, திருமங்கலம், அண்ணா நகர் டவர், அண்ணா நகர் கிழக்கு, சென்ட்ரல், எழும்பூர், தேனாம்பேட்டை,டிஎம்எஸ், ஆயிரம் விளக்கு, அரசு விருந்தினர் மாளிகை, உயர் நீதிமன்றம், மண்ணடி, வண்ணாரப்பேட்டை ஆகிய 19 மெட்ரோ ரயில் நிலையங்களில் 32 ஏடிஎம்கள் நிறுவப்பட உள்ளது.

டெண்டர்
இதற்காக ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் தலா 5 சதுர மீட்டர் இடம் ஒதுக்கீடு செய்யப்படுகிது இதற்கான டெண்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. வங்கிகள் இறுதி செய்த பின்னர், அவர்கள் ஏடிஎம்கள், பணம் செலுத்தும் இயந்திரங்களை அமைப்பார்கள்" என்று தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications