காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம்.. பிடிபட்ட 4 சிறார்கள்! ஷாக்!
சென்னை: சென்னையில் காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய 4 சிறுவர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை சென்ட்ரல் - மைசூர் இடையே காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் மைசூர் தொடங்கி, பெங்களூர், ஜோலார்பேட்டை, திருவள்ளூர் வழியாக சென்னை சென்ட்ரல் வந்தடையும். மைசூரில் இரவு 8.30 மணிக்குப் புறப்பட்டு காலை 7 மணிக்கு சென்னை செண்ட்ரலை வந்தடையும்.

நேற்று முன்தினம் இரவு மைசூரில் புறப்பட்ட காவேரி எக்ஸ்பிரஸ் அதிவிரைவு ரயில் நேற்று காலை 7 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. இதையடுத்து, அந்த ரயில் கும்மிடிப்பூண்டியில் உள்ள டிப்போவுக்கு சென்றது. அப்போது, திருவொற்றியூர் அருகே சென்ற போது மர்ம நபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தினர்.
திடீரென சத்தம்.. அலறிய பயணிகள்! காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீச்சு.. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!
கல்வீச்சில் ரயில் பெட்டி கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன. பெட்டிகள் காலியாக இருந்ததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ரயில் நிலையம் வந்ததும், அதிகாரிகள் ரயிலை ஆய்வு செய்தனர். ரயில் பெட்டிகள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து, மர்ம நபர்களை வலை வீசி தேடி வந்தனர்.
இந்நிலையில், காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் கற்கள் வீசப்பட்டது தொடர்பாக கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி 4 சிறார்களை பிடித்துள்ளனர்.வரும் 9ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு பெற்றோர்களின் எழுதி வாங்கிக்கொண்டு சிறார்களை அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications