கல்லூரி மாணவர்கள் கையில் கத்தி.. 4 பேரை தூக்கிய போலீசார்! “பஸ் டே” அட்டகாசம்? சென்னையில் அதிர்ச்சி!
சென்னை: கல்லூரி தொடங்கிய முதல் நாளிலேயே சென்னையில் மாநிலக் கல்லூரி மாணவர்கள் 4 பேர் கத்தியுடன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பின்னர் கலை அறிவியல் கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டன. விடுமுறை முடிந்து மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் கல்லூரிக்கு வந்துள்ளனர். பஸ் டே, ரூட் தல மோதல்களில் மாணவர்கள் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை புதுவண்ணாரப்பேட்டை டோல்கேட் பேருந்து நிலையம் பகுதியில் இன்று காலை 10க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கூட்டமாக நின்று கொண்டு போட்டோ எடுத்துக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் புதுவண்ணாரப்பேட்டை போலீசார் அங்கு வந்து அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது "பஸ் டே" கொண்டாடுவதற்காக கூட்டமாக இருப்பதாகவும் அதற்காக குரூப் போட்டோ எடுத்துக் கொண்டோம் என்றும் அந்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் தீவிரமாக சோதனை நடத்தியபோது அவர்கள் கத்திகள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து மாணவர்கள் 4 பேரை புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் என்பதும் தாம்பரம், பொன்னேரி பகுதிகளைச் சேர்ந்த அந்த மாணவர்கள் பஸ் டே கொண்டாடுவதற்காக இன்று கூட்டமாக நின்றதாகவும் தெரிவித்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து 4 கத்திகளை பறிமுதல் செய்த போலீசார், அவர்களிடம் கத்திகளை எங்கிருந்து வாங்கினீர்கள் என்று கேட்டதற்கு, தங்கள் கல்லூரியில் படித்து வரும் மாணவர்களிடம் வாங்கியதாக தெரிவித்தனர். இதையடுத்து, இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரி மாணவர்கள் எதற்காக கத்தி வைத்திருந்தார்கள், மற்ற கல்லூரி மாணவர்களிடம் மோதல் ஏதேனும் உள்ளதா? அல்லது பஸ் டே கொண்டாடும்போது கத்தியை வீசி வீடியோ எடுப்பதற்காக வைத்திருந்தார்களா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications