தனிநபர் கடன்.. கோடிகளில் ஏமாந்த சென்னை வங்கிகள்.. அல்வா கொடுத்த ஆந்திர கும்பல் சிக்கியது எப்படி?
சென்னை: சென்னையில் உள்ள வங்கிகள், நிதி நிறுவனங்களில் போலி ஆவணம் மூலம் ரூ.2½ கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட ஆந்திராவை சேர்ந்த 4 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். கன்சல்டிங் நிறுவனம் ஒன்றில் சாப்ட்வேர் என்ஜினியர்களாக பணியாற்றி வருவதாக கூறி போலி சம்பள பட்டியல் கொடுத்து மோசடி செய்திருக்கிறார்களாம். எப்படி இந்த மோசடி நடந்தது. வங்கிகள் எப்படி ஏமாந்தன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
சென்னையில் உள்ள பல்வேறு வங்கிகள், நிதி நிறுவனங்களில், சிலர் அதிக சம்பளம் வாங்குவதாக பொய்யாக அனுப்பி தனிநபர் கடன் வாங்குவது அடிக்கடி நடக்கிறது. சாப்ட்வேர் இன்ஜினியர், ஐடி ஊழியர், கார்ப்பரேட் நிறுவன உயர் அதிகாரி என்று கூறி வங்கிகளை ஏமாற்றுகிறார்கள். வங்கிகள் அவர்களின் சம்பளத்தை பார்த்து, தனிநபர் கடன் கொடுக்கிறார்கள். ஆனால் கடனை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றி விடுகிறார்கள். அப்படித்தான் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் வங்கிகளை ஏமாற்றியுள்ளார்கள்.

சென்னை போலீஸ் கமிஷனர் அருணிடம் அமைந்தகரையில் உள்ள தனியார் வங்கி கிளையின் மேலாளராக பணியாற்றி வரும் திவ்யன் குமார் என்பவர் இதுபற்றி புகார் அளித்திருந்தார். அந்த புகாரில் அவர் கூறுகையில், "கன்சல்டிங் நிறுவனம் ஒன்றில் சாப்ட்வேர் இன்ஜினியர்களாக பணியாற்றி வருவதாக கூறி போலி சம்பள பட்டியல் கொடுத்தார்கள்.
ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்த ஏகாம்பரம் (வயது 27), கேசவ் கங்காராஜ் (25), கிருஷ்ணமூர்த்தி (24) ஆகிய 3 பேர் தனி நபர் இந்த போலி சம்பள பட்டியலை கொடுத்தார்கள். கடனாக ரூ.1 கோடியே 2 லட்சம் பெற்று மோசடி செய்துவிட்டனர். அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்கள். இந்த புகார் மனு மீது உடனடியாக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி புலனாய்வு பிரிவு போலீசாருக்கு கமிஷனர் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணையில் இறங்கினார்கள்.
இதில் இவர்கள் 3 பேரும் இதே பாணியில் சென்னையில் உள்ள பல்வேறு வங்கிகள், நிதி நிறுவனங்களில் தனிநபர் கடனாக ரூ.2 கோடியே 47 லட்சத்து 85 ஆயிரம் கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் ஏமாற்றி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இந்த வழக்கில் அவர்கள் 3 பேரும் அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில் இந்த மோசடிக்கு சித்தூரை சேர்ந்த குமார் (29) என்பவர் மூளையாக செயல்பட்டு இருப்பது தெரிய வந்தது. அவரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் 4 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications