மிரட்டும் டெங்கு! சென்னையில் 4 வயது சிறுவன் காய்ச்சலுக்கு பலி.. பெற்றோர் அதிர்ச்சி குற்றச்சாட்டு!
சென்னை: சென்னை மதுரவாயலில் 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரவாயல் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அய்யனார் - சோனியா தம்பதியினரின் நான்கு வயது மகன் ரக்ஷன் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில், சிறுவனின் பெற்றோர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு ரத்தப் பரிசோதனை செய்தபோது சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து மேல்சிகிச்சைக்காக கடந்த 6ஆம் தேதி எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் ரக்ஷன் பரிதாபமாக உயிரிழந்தார்.
4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலுக்கு பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அவர்கள் வசிக்கும் பகுதியில் மழை நீர் தேங்கி உள்ளதாகவும், சுகாதார சீர்கேடு காரணமாகவே சிறுவன் உயிரிழந்ததாகவும் அவரது பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த குடியிருப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருவதால், டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications