தாம்பரம் அருகே 46 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. மறுத்ததால் கடுமையாக தாக்கிய பார் ஊழியர்கள்
சென்னை: தாம்பரம் அருகே கணவனால் கைவிடப்பட்ட பெண் ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்து அதற்கு அவர் மறுக்கவே சரமாரியாக தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மண்ணிவாக்கத்தை சேர்ந்த 46 வயது பெண். இவர் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளருக்கு ஒரு புகார் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் சென்னை அசோக் நகர் அருகே ஒரு பார் இயங்கி வருகிறது.

இங்கு பெண் பவுன்சர் வேலைக்காக நான் சென்றிருந்தேன். என்னிடம் தானு என்பவர் அவரை முதலாளி என அறிமுகப்படுத்திக் கொண்டார். என்னை வேலைக்கும் எடுத்துக் கொண்டார். மேலும் மாத சம்பளமாக ரூ 30 ஆயிரம் பேசப்பட்டது. ஆனால் எனக்கு 4 மாதங்களாகியும் சம்பளத்தை சரியாக தரவில்லை.
அவர் இடையிடையே கொஞ்சம் கொஞ்சமாக எனக்கு ரூ 40 ஆயிரம் மட்டுமே கொடுத்துள்ளார். மீதம் ரூ 80 ஆயிரத்தை தரவே இல்லை. இதனால் குடும்பத்தில் உள்ள செலவுகளை என்னால் பூர்த்தி செய்ய முடியவில்லை. இதனால் நான் தானுவிடம் போய் "என்னுடைய மீத சம்பளத்தை கொடுத்துவிடுங்கள், நான் வேறு இடத்தில் வேலை தேடிக் கொள்கிறேன்" என கேட்டேன்.
அதற்கு அவர் பாக்கி சம்பளத்தை தர மறுத்தார். மேலும் நான் கணவரால் கைவிடப்பட்டவள் என்பதை சுட்டிக் காட்டிய தானு, அவர் சொல்படி கேட்டு அவருடைய ஆசைக்கு இணங்கினால் சம்பளம் மட்டுமில்லாமல் நான் கேட்பதையெல்லாம் செய்து தருவதாகவும் என்னை ராணி மாதிரி வைத்திருப்பதாகவும் என்னிடம் ஆபாசமாக பேசினார்.
இதற்கு நான் மறுத்தேன். உடனே கடந்த 15 ஆம் தேதி காலை 5 மணிக்கு என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். என்னை கடுமையாக தாக்கினார். கண்ணாடி பாட்டிலாலும் இரும்பு மைக்காலும் என்னை தாக்கி, காலால் மிதித்தார். தானுவின் கூட்டாளிகள் ராஜ்குமார், அஜித் மற்றும் பெயர் தெரியாத இருவர் என்னை சுற்றி நின்றுக் கொண்டு நான் தப்பாத வகையில் தடுத்தும் என் கைகளை பிடித்தும் கொண்டனர்.
அவர்களும் என்னை கொடூரமாக தாக்கி பாலியல் துன்புறுத்தல் செய்தனர். மேலும் இதை வெளியே சொன்னால் என்னையும் என் குடும்பத்தினரையும் மாடியில் இருந்த தள்ளிவிட்டு கொலை செய்துவிடுவோம் என தானுவும் அவருடைய கூட்டாளிகளும் மிரட்டினர். எனவே என்னிடம் தவறாக நடந்து கொண்ட தானு மற்றும் அவருடைய கூட்டாளிகள் 4 பேர் மீது தக்க நடவடிக்கை எடுத்து எனக்கு நியாயத்தை பெற்றுத் தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். ஆனால் இந்த புகாரை போலீஸார் பதிவு செய்ய மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications