ரூ.100-ஐ தாண்டிய தக்காளி விலை.. 5 முக்கிய காரணங்கள் என்ன? உக்ரைன் - ரஷியா போரும் லிஸ்டில் இருக்கு
சென்னை: தமிழ்நாடு முழுவதும் தக்காளி விலை ரூ.100-ஐ தாண்டியதால் சாமானிய மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி இருக்கின்றனர். 6 மாதங்களுக்கு முன் கடுமையான தட்டுப்பாடு காரணமாக ரூ.100-ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்ட தக்காளியின் விலை, நிலைமை சீரானவுடன் கிலோ ரூ.2 ஆக குறைந்தது.
தக்காளிக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்று கூறி தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் விவசாயிகள் அவற்றை லாரியோடு சாலையில் கொட்டி போராட்டங்களில் எல்லாம் ஈடுபட்டு வந்தனர். பலர் தக்காளியை பறிக்காமல் பயிரிலேயே காயவிட்டனர்.
இந்த சூழலில்தான் ரிப்பீட் மோடுக்கு சென்று தக்காளி விலை மீண்டும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. எல்லா வகை உணவிலும் தவிர்க்க முடியாத ஒன்றாக திகழும் தக்காளியின் இந்த விலை உயர்வு வீடுகளின் உணவுக்கான பட்ஜெட்டையே பதம் பார்த்திருக்கிறது.

தமிழ்நாட்டில் தக்காளி உற்பத்தி
இந்திய அளவில் தக்காளி உற்பத்தியில் தமிழ்நாடு 4 வது இடத்தில் உள்ளது. ஆண்டுக்கு 15.92 லட்சம் டன் தக்காளியை 52,898 ஹெக்டேர் பரப்பளவு நிலத்தில் தமிழ்நாடு உற்பத்தி செய்து வருகிறது. 17,527 டன் தக்காளியை தமிழ்நாட்டில் குளிர்சாதன சேமிப்புக் கூடங்களில் வைக்கலாம். நிலைமை இப்படி இருக்க தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் தக்காளி விலை இந்த அளவுக்கு உயர்ந்திருப்பதற்கு 5 முக்கிய காரணங்கள் உள்ளன.

பணவீக்கம்
இந்தியாவின் ஏப்ரல் மாத பணவீக்கம் 7.79% ஆக அதிகரித்துள்ளது இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்து இருக்கும் இந்த பணவீக்கம் உணவுப் பொருட்களின் விலையேற்றத்துக்கு காரணமாக அமைந்துள்ளது. இலங்கை உட்பட பல நாடுகளில் பணவீக்கத்தின் தாக்கத்தால் உணவுப் பொருட்கள் விலை உயர்ந்துள்ளன. இந்த தக்காளி விலையேற்றத்துக்கும் இது ஒரு காரணமாக இருக்கிறது.

உரம் விலை
உரங்களின் விலை கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக உணவுப் பொருட்களின் உற்பத்தி செலவும் கணிசமான அளவுக்கு அதிகரித்து உள்ளது. இந்த செலவுகள் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலையை எதிரொலிக்கின்றன. அடுத்த சில மாதங்களில் உரங்களின் விலை உயர்வால் உணவுப் பொருட்கள் விலை உயரும் என அண்மையில் பொருளாதார நிபுணர்கள் கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ரஷியா - உக்ரைன் போர்
உக்ரைன் - ரஷியா இடையே நடந்து வரும் போரால் சர்வதேச அளவில் உணவு பொருட்களின் விலையில் நிலையற்ற தன்மை நிலவி வருகிறது. வழக்கமான உணவு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பல நாடுகளில் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் உணவுப் பொருட்களின் விலையும் உயர்வை சந்தித்துள்ளது. இந்தியாவிலும் அதன் தாக்கம் எதிரொலித்து வருகிறது.

கோடை மழை
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்த கோடை மழை காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டதால் குறைவான அளவிலேயே அவை விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதன் காரணமாக வியாபாரிகள் நேரடியாக ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு சென்று தக்காளியை வாங்கி தமிழ்நாடு கொண்டு வந்தனர். ஆனால், அசானி புயல் காரணமாக ஆந்திராவிலும் கனமழை பெய்து வருவதால் அங்கும் தக்காளி உற்பத்தி கடும் பாதிப்பை சந்தித்து இருக்கிறது. இதனாலும் தக்காளி விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

பெட்ரோல், டீசல் விலையேற்றம்
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை பன்மடங்கு உயர்ந்து இருப்பதால் உற்பத்தி செய்யப்படும் உணவு பொருட்களை சந்தைகளுக்கு கொண்டு செல்வதற்கு பெரும் தொகையை விவசாயிகள் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. டீசல் விலையேற்றத்தால் சரக்கு லாரிகளின் வாடகை அதிகரித்து அது தக்காளி விலையில் எதிரொலித்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications