5 திமுக அமைச்சர்கள் சிறை செல்வார்கள்.. உதயநிதிக்கும் ED செக்.. அடித்து சொல்லும் தாமோதரன் பிரகாஷ்
சென்னை: திமுக ஆட்சி முடியும் முன் 5 திமுக அமைச்சர்கள் சிறையில் இருப்பார்கள். அதில் மாற்று கருத்தே இல்லை. அதில் உதயநிதி ஸ்டாலின் சிறைக்கு செல்வார். ஸ்டாலினை சிறைக்கு கொண்டு செல்ல முயற்சி செய்வார்கள். இதை எல்லாம் திமுக எதிர்பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது என்று ஒன்இந்தியாவிற்கு டாஸ்மாக் ரெய்டு தொடர்பாக பேட்டி அளித்த மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டியுள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள், சென்னை மணப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் வீட்டில் ரெய்டு நடத்தினார்கள். கடந்த இரண்டு நாட்களாக அங்கே ரெய்டு நடத்தப்பட்டு வந்தது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை அதிகவிலைக்கு விற்பனை செய்தது, பார் உரிமம் வழங்கியது உள்ளிட்டவற்றில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் கூறப்பட்டது.

இதுதொடர்பாக, கடந்த 2017 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத் துறையினர், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக தற்போது மீண்டும் ரெய்டுகள் நடத்தப்பட்டு வருகிறது.
இது தொடர்பான வழக்கில் ஏற்கனவே டாஸ்மாக்கிற்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தீவிரமானது. அதுகுறித்து முழு விசாரணை நடத்தப்பட வேண்டும். அதன் ஆரம்ப கட்ட நடவடிக்கையான சோதனையை எதிர்ப்பது குற்ற நீதி பரிபாலனத்தின் அஸ்திவாரத்தை பாதிக்கும். சோதனைக்கு அரசிடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என்பதை ஏற்று கொள்ள முடியாது. கூட்டாட்சி தத்துவம் இந்த வழக்கிற்கு பொருந்தாது என்றும் கூட்டாட்சி தத்துவத்தை மக்களின் மேம்பாட்டிற்காக பயன்படுத்த வேண்டுமே தவிர தேசத்திற்கு எதிரான குற்றம் குறித்த விசாரணையை தடுக்க பயன்படுத்த கூடாது என உயர் நீதிமன்ற நீதிபதிகளும் அறிவுறுத்தியுள்ளனர்.
டாஸ்மாக் ரெய்டு பேட்டி
இந்த நிலையில் ஒன்இந்தியாவிற்கு டாஸ்மாக் ரெய்டு தொடர்பாக பேட்டி அளித்த மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ், இந்த திமுக ஆட்சி முடியும் முன் 5 திமுக அமைச்சர்கள் சிறையில் இருப்பார்கள். அதில் மாற்று கருத்தே இல்லை. அதில் உதயநிதி ஸ்டாலின் சிறைக்கு செல்வார். ஸ்டாலினை சிறைக்கு கொண்டு செல்ல முயற்சி செய்வார்கள். இதை எல்லாம் திமுக எதிர்பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தனர். டெல்லியில் அதுதான் நடந்தது. அதுவே தமிழ்நாட்டில் நடக்கும்.
ஹேமந்த் சோரனை கைது செய்தனர். பினராயி விஜயன் குடும்பத்தில் எல்லோரையும் கைவைத்தனர். இந்தியாவில் 100 ஈடி ரெய்டுகளில் 80 சதவிகிதம் தமிழ்நாட்டில் நடக்கிறது. டாஸ்மாக் விவகாரத்தில் ரெய்டு நடத்தினீர்கள். ஆனால் இதில் என்ன ஊழலை நிரூபித்தீர்கள். இதில் விசாகனை ஏற்கனவே ரெய்டு செய்தனர். ஏற்கனவே விசாரணை செய்தீர்கள். அவர் இந்த பொறுப்பிற்கு வரும் போதே எல்லாம் தெரிந்தே வந்தார்.

ஐஏஎசுக்கு என்று பெரிய லாபி இருக்கிறது. அவருக்கு என்று பவர் புல் லாபி உள்ளது. 8 ஐஏஎஸ் அதிகாரிகளை மணல் மேட்டரில் நெருக்கினீர்கள். அதில் பிறகு என்ன செய்ய முடிந்தது. இதெல்லாம் எதிர்பார்த்ததுதான். துரைமுருகன், கே என் நேரு, அனிதா ராதாகிருஷ்ணன், மூர்த்தி, உதயநிதி ஸ்டாலின் என்று 5 அமைச்சர்கள் அமலாக்கத்துறையின் டார்கெட். அடுத்த டார்கெட் ஸ்டாலின். தமிழ்நாட்டில் பாஜகவால் வெற்றிபெறவே முடியாது. என்ன செய்தாலும் ஆட்சியை பிடிக்கவே முடியாது.
அது பாஜகவிற்கே தெரியும். இதைத்தான் ராகுல் காந்தியும் கூறினார். அதனால் வேறு வழியே இல்லாமல் இப்போது ரெய்டு நடத்தி அமைச்சர்களை உள்ளே தள்ள பார்க்கிறார்கள், என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications