சக்கைப்போடு போடும் ‘நம்பர்’ லாட்டரி.. சென்னையில் சட்ட விரோதமாக விற்பனை செய்த கும்பல் கைது!
சென்னை: சென்னை அரும்பாக்கத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சட்ட விரோதமாக நடைபெறும் லாட்டரி விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.
தமிழ்நாட்டில், இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை அதிகளவு லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. மதுபோதைக்கு அடிமையாவதை போல பலரும் லாட்டரி சீட்டு போதைக்கு அடிமையானார்கள். இதனால் பல குடும்பங்கள் சீரழிந்தன. இதையடுத்து கடந்த 2003ஆம் ஆண்டு தமிழக அரசு லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதித்தார். வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கும் தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டது.

எனினும், அதன் பிறகு அங்கொன்றும் இங்கொன்றுமாக சட்டவிரோதமாக நம்பர் லாட்டரி விற்பனை தமிழ்நாட்டில் நடைபெற்று வந்தது. குறிப்பாக, எல்லையோர மாவட்டங்களில் லாட்டரி விற்பனை சட்ட விரோதமாக நடைபெற்று வந்தது. சமீப காலமாக சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சட்ட விரோத லாட்டரி விற்பனை சூடுபிடித்துள்ளது.
ஒரு நம்பர், இரண்டு நம்பர், மூனு நம்பர் லாட்டரி சீட்டுக்கள் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கூட சென்னை பிராட்வே பகுதியில் ஒரு நம்பர் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்தவர்களைப் பிடித்து, போலீசார் சிறையில் அடைத்தனர். எனினும், லாட்டரி விற்பனை தொடர்ந்து நடப்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்துள்ளன.
இந்நிலையில், சென்னை அரும்பாக்கத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், அங்கு அதிரடியாகச் சென்று, லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து செல்போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஒரு நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட பாரதி, சரவணன், நமச்சிவாயம், பாலாஜி, ரமணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்த லாட்டரி சீட்டுகள், ரூபாய் 25 ஆயிரம் ரொக்கப் பணம், செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நம்பர் லாட்டரிகள் விற்பனை தமிழ்நாட்டில் அதிகரித்திருப்பது சமூக ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. லாட்டரி விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க காவல்துறை உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளன.
லாட்டரி விற்பவர்களிடம் 3 இலக்க நம்பரை சொல்லி அதனை அவர்கள் பேப்பரில் எழுதித் தருவார்கள். கேரளா, அசாம் மாநில லாட்டரிகளில் பரிசு விழும் நம்பரில் இந்த எண்கள் இருந்தால் இவர்களுக்கும் பரிசு கிடைக்கும். இந்த லாட்டரி விற்பனை சென்னையில் நாள்தோறும் பல லட்சங்களில் நடைபெறுவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications