டோல்கேட் கட்டணம் உயர்வு.. தமிழ்நாட்டில் 5 சுங்கச்சாவடிகளில் எகிறுது.. எங்கெங்கு தெரியுமா?
சென்னை: தமிழ்நாட்டில் 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. வரும் ஏப்ரல் 1 முதல் சுங்கச்சாவடி கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.
தமிழகம் முழுவதும் மொத்தமுள்ள 54 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இரண்டு பிரிவாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதம் குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளுக்கும், செப்டம்பர் மாதம் மீதமுள்ள சுங்கச்சாவடிகளுக்கும் ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்திக் கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதித்துள்ளது.

இதன் அடிப்படையில் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாகவும், இந்த சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் சுங்கக்கட்டண உயர்வு அமலுக்கு வரும் என்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மாதாந்திர சுங்கச்சாவடி கட்டணம் ரூ. 100 முதல் 400 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, ஒரு முறை பயணம் செய்வதற்கான கட்டணம் மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ. 5 முதல் 20 வரை உயர்ந்துள்ளது.
அரியலூர் மாவட்டம் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம் ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. மேலும், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது.
லோக்சபா தேர்தலை ஒட்டி திமுக மற்றும் அதிமுக இரு கட்சிகளும் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில், தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி கட்டணம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என இரு கட்சிகளுமே அறிவித்துள்ளன.
இந்நிலையில், தேர்தல் நெருங்கும் சூழலில் சுங்கச்சாவடி கட்டணம் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் நத்தம் அருகே உள்ளூர் மக்களிடம் டோல்கேட் கட்டணம் கேட்டதற்காக சுங்கச்சாவடியை பொதுமக்கள் சூறையாடியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications