சீசிங் ராஜா உடலை ஒப்படைப்பதில் விநோத பிரச்சனை.. மனைவி எனக் கூறி உரிமை கோரும் 5 பெண்கள்! பரபரப்பு
சென்னை: என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா உடலுக்கு அவரது மனைவியோடு மேலும் 4 பெண்களும் உரிமை கோருவதால், அவரது உடலை ஒப்படைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் சீசிங் ராஜா நேற்று ஆந்திராவில் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று காலை சென்னை அருகே என்கவுண்டர் செய்யப்பட்டார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம்சென்னையை அடுத்த பெரம்பூரில் அவரது வீட்டருகே ஒரு கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 28 பேர் கைது செய்யப்பட்டனர். ரவுடி திருவேங்கடம் என்பவர் இந்த வழக்கு விசாரணையின் போது போலீசாரின் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான பிரபல ரவுடி சீசிங் ராஜாவை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த சீசிங் ராஜா ஆந்திராவில் இருப்பதாக தகவல் கிடைத்தை அடுத்து, அங்கு விரைந்த தனிப்படை போலீசார், ஆந்திர மாநிலம் கடப்பாவில் சீசிங் ராஜாவை நேற்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சீசிங் ராஜா மீது ஆம்ஸ்ட்ராங் கொலை தவிர மேலும் 5 கொலை வழக்குகள் மற்றும் 33 பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சீசிங் ராஜா, ரவுடி ஆற்காடு சுரேஷுக்கு நெருக்கமாக இருந்துள்ளார். சீசிங் ராஜா வெவ்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்தார். அண்மையில் வழக்கு ஒன்றில் சீசிங் ராஜா தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தாம்பரம் பகுதி முழுக்க போலீசார் போஸ்டர் ஒட்டி இருந்தனர்.
நேற்று கைது செய்யப்பட்ட சீசிங் ராஜாவை வேளச்சேரியில் பதியப்பட்ட ஒரு வழக்கு தொடர்பாக ஆயுதங்களை பறிமுதல் செய்ய இன்று அதிகாலையில் நீலாங்கரை அருகே பக்கிங்ஹாம் கால்வாய் பகுதிக்கு போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது, ஆயுதங்களை எடுத்த சீசிங் ராஜா, போலீசாரை நோக்கி சுட்டதாக தெரிகிறது. அதில் போலீசாரின் வாகனங்கள் மீது குண்டுகள் பாய்ந்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது, தற்காப்புகாக ஆய்வாளர் விமல், சீசிங் ராஜாவை சுட்டுள்ளார். அதில், 2 குண்டுகள் பாய்ந்து சீசிங் ராஜா உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
உயிரிழந்த சீசிங் ராஜா உடல், உடற்கூராய்வுக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு, அங்கு வைக்கப்பட்டுள்ளது. ரவுடி சீசிங் ராஜா என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்தை உயர் காவல் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். அங்கும், ராயப்பேட்டை மருத்துவமனையிலும் பாதுகாப்பு பணியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சீசிங் ராஜாவின் உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். சீசிங் ராஜாவின் மனைவி ஜானகியிடம், உடற்கூராய்வுக்காக ஒப்புதல் கையெழுத்தை பெற்றுள்ளனர். அப்போது மேலும் 4 பெண்கள் சீசிங் ராஜாவின் உடலுக்கு உரிமை கோரி உள்ளனர். தாங்களும் சீசிங் ராஜாவின் மனைவி என அவர்கள் ஒவ்வொருவரும் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சீசிங் ராஜா உடலுக்கு உரிமை கோரும் 4 துணைவிகளில் ஒரு பெண் வழக்கறிஞர் என்றும், அவர் சட்டப்படி சீசிங் ராஜாவின் உடலுக்கு உரிமை கோரும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், போலீசார் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினருக்கு சீசிங் ராஜாவின் உடலை ஒப்படைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
என்கவுண்டர் செய்யப்பட்ட சீசிங் ராஜா மனைவி ஜானகி நேற்று வெளியிட்ட வீடியோவில், தனது கணவர் சீசிங் ராஜாவை போலீசார் என்கவுண்டர் செய்ய திட்டமிட்டுள்ளதாக தனது குழந்தையுடன் வீடியோ வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications