டிரம்ப் விதித்த 50 சதவீத வரியால்! தமிழகத்தில் ஆடை உற்பத்தி பெண் தொழிலாளர்களுக்கு 50% ஊதியம் கட்!
சென்னை: அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பால், தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆலைகளில் ஆடை வடிவமைப்பு தொழில் செய்து வரும் பெண் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பல பெண்கள் வேலை இழக்கும் அபாயமும் உள்ளது.
இந்தியாவின் பொருட்களுக்கு அமெரிக்காவில் 50 சதவீத பரஸ்பர வரி விதிப்பை கடந்த 27ஆம் தேதி நள்ளிரவு முதல் அந்த நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் அமல்படுத்தினார். இதனால் பொருட்களின் விலை உயரும் என்ற நிலை ஒரு புறம் இருந்தாலும் தமிழகத்தில் ஜவுளித் துறையில் உற்பத்தி பிரிவில் பணியாற்றும் பெண்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

தமிழகத்தில் மேற்கு மாவட்டங்களில் ஏராளமான ஜவுளி உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு உற்பத்தி, பேக்கிங், டெய்லரிங், தர சோதனை என பல்வேறு பிரிவுகளில் பெண்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் பிரத்யேகமாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பிராண்டுகளுக்கும் துணிகளை உற்பத்தி செய்து அனுப்புகிறார்கள். தற்போது டிரம்ப் விதித்த வரியால் அந்த பெண்களில் பலர் வேலையிழக்கும் அபாயத்தையோ, ஓவர் டைம் பார்க்க தேவை ஏற்படாததையோ, சம்பள குறைப்பையோ சந்திக்க நேரிடுகிறது.
பணம் சம்பாதிப்பது
நகரம், கிராமம் என்றில்லை, இன்று வீட்டில் ஆணும் பெண்ணும் சம்பாதித்தால்தான் குடும்பத்தை நடத்த முடியும் என்ற நிலை உள்ளது. ஒரு சம்பளம் வாய்க்கும் வயிற்றுக்கும் மட்டுமே போதுமானதாக இருக்கும். குழந்தைகளின் எதிர்காலம், அவர்களின் கனவுகளை நிறைவேற்ற போதுமானதாக இருக்காது.
சிங்கிள் உமன்
இது போன்ற பெண்களில் பலர் கணவனால் கைவிடப்பட்டவர்களோ, கணவனை இழந்தவர்களோ கூட இருக்கிறார்கள். இன்னும் சிலர் கணவர் இருந்தும் இல்லாத நிலை இருப்பதால் குடும்பத்தை காப்பாற்ற வேலைக்கு வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் அமெரிக்காவின் ஃபேஷன் பிராண்டுகளுக்கு ஆடை ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலைகளில் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பெண்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
திண்டுக்கல் தொழிலாளி கண்ணீர்
இதுகுறித்து திண்டுக்கல்லில் ஒரு துணி உற்பத்தி ஆலையில் பணியாற்றும் சரஸ்வதி (35) என்பவர் கூறுகையில், எங்கள் நிறுவனத்தில் அமெரிக்க பிராண்டுகளுக்கான ஆடை உற்பத்திக்கான ஆர்டர்களை குறைய தொடங்கியது வரை டிரம்ப் விதித்த வரிகள் குறித்து எனக்கு எதுவுமே தெரியாது. நான் அந்த நிறுவனத்தில் துணி உற்பத்தி பிரிவில் பணியாற்றி வருகிறேன். என்னை போல் பிற பெண்களும் அந்த துறையில் பணியாற்றி வருகிறார்கள். தற்போது எங்களை சுழற்சி முறையில் பணிக்கு வரச் சொல்லியிருக்கிறார்கள். அப்படியென்றால் வாரத்தில் 6 நாட்கள் வேலைக்கு பதிலாக எங்களுக்கு வெறும் 3 நாட்கள் மட்டுமே வேலை கொடுப்பார்கள். இந்த ஷிப்ட் நடைமுறை தொடங்கினால் வேலை நேரம் பாதியாக குறைக்கப்பட்டதை போல் ஊதியமும் பாதியாக குறையும் என்கிறார்.
ஊதியம் என்னவாகும்
அது போல் சரஸ்வதி என்பவர் கூறுகையில், நான் என்ன செய்ய போகிறேன் என்றே தெரியவில்லை. நான் மாதம் 12 ஆயிரம் சம்பாதித்து வருகிறேன். வீட்டில் நிறைய பிரச்சினைகளுக்கு கடன் வாங்கி இஎம்ஐ செலுத்தி வருகிறேன். தற்போது வாரத்தில் 3 நாட்கள் வேலை என்பதால் என் ஊதியம் ரூ 6000 என பாதியாக குறையும். இந்த 6 ஆயிரத்தில் நான் என் கடனான 5,500 ரூபாயை செலுத்திவிட்டு மீதம் 500 ரூபாயில் எப்படி குடும்பம் நடத்துவது? என கண்ணீர் மல்க கேட்கிறார்.
பாதியாக குறையும் சம்பளம்
அது போல் ஒரு நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றும் ஒரு பெண் ஒரு நாளைக்கு ரூ 430 கூலி என்றால் வாரத்திற்கு ரூ 11,200 ஆகிறது. ஓவர் டைம் பார்த்தால் கூடுதலாக ரூ 2800 என மாதந்தோறும் ரூ 11 ஆயிரம் முதல் ரூ 14 ஆயிரம் வரை ஊதியம் கிடைக்கும். தற்போது இதுவும் பாதியாக குறைந்துவிட்டால் நான் என் குடும்பத்தை எப்படி காப்பாற்றுவது என வேதனை தெரிவித்தார்.
கடனை அடைப்பது எப்படி
அது போல் அமெரிக்கா நிறுவனத்திற்கு ஆடைகளை அனுப்பும் இன்னொரு நிறுவனத்தை சேர்ந்த திண்டுக்கல் பெண் சீமா (43) என்பவர் கூறுகையில், நானும் என் கணவரும் சேர்ந்து மாதத்திற்கு ரூ 16 ஆயிரம் முதல் ரூ 18 ஆயிரம் வரை சம்பாதித்து வருகிறோம். இந்த பணத்தில் வீட்டிற்கான தவணை, மகனின் பொறியியல் கல்லூரி கட்டணத்தை பார்த்தாக வேண்டும். இந்த ஊதியமும் பாதியாக குறைந்துவிட்டால் எங்கள் நிலைமை மோசமாகும் என்றார்.
ஈரோடு நிறுவனம்
ஈரோட்டில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் அனிதா என்பவர் கூறுகையில், நானும் என் தாயும் பணியாற்றி வருகிறோம். எனக்கு ரூ 12,500, என் தாய்க்கு ரூ 11,200 என ஊதியம் கொடுக்கப்படுகிறது. இதை வைத்து கடனை அடைத்து வருகிறோம். தற்போது வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே சுழற்சி அடிப்படையில் வேலை என்பதால் என் தாயின் வருமானம் பாதியாக குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நான் ஐரோப்பா நாட்டு பிராண்ட் ஆடைகளை உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் பணிபுரிவதால் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றார்.
70 சதவீதம் பேர் புலம்பெயர் தொழிலாளர்கள்
திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஏராளமான துணி உற்பத்தி ஆலைகள் உள்ளன. இங்கு ஒடிஸா, ஜார்க்கண்ட், பீகார், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 70 சதவீதம் பேர் பணியாற்றி வருகிறார்கள். புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரையும் ஒரு விடுதியில், ஆலை நிறுவனங்கள் தங்க வைத்துள்ளன. அவர்கள் குறைந்த சம்பளத்திற்கு நீண்ட நேரம் பணியாற்றுவார்கள் என்பதால் பல நிறுவனங்கள் புலம்பெயர் தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்காமல் உள்ளூர் மக்களை நீக்கியுள்ளது. மேலும் பலர் நிறுவனங்களிடம் இருந்து வாங்கிய கடனுக்காக பணியாற்றுகிறார்கள் என்பதால் தங்களது பணம் திரும்ப கிடைக்க, புலம் பெயர் தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்க மாட்டார்கள். இதனால் தமிழக தொழிலாளர்கள் பலிகடாவாகியுள்ளார்கள் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications