விரைவில் உள்ளாட்சி தேர்தல்.. பெண்குலத்தின் வாக்குகளை சிதறாமல் அள்ள தமிழக அரசு பலே திட்டம்
சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், விரைவில் 500 டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்ளாட்சி தேர்தலுக்கும், டாஸ்மாக் கடைகளுக்கும் என்ன சம்பந்தம் என நீங்கள் நினைப்பது புரிகிறது. டாஸ்மாக் கடைகளை மூட முடிவு செய்துள்ளதற்கான காரணம் பெண் குலத்தின் வாக்குகள் என்பது தான் ஹைலைட்.

சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தல்கள் மற்றும் மக்களவை தேர்தல்களின் முடிவுகள் ஆளும் தரப்பை மிகவும் யோசிக்க வைத்துள்ளதாக தெரிகிறது. மக்களவை தேர்தலில் தமிழகத்தில் ஒரே இடத்தில் மட்டும் தான் அதிமுக வெற்றி பெற்றது. சட்ட மன்ற இடை தேர்தல்களில் 9 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தாலும், இதை பெரிய வெற்றி என ஆளும் தரப்பால் கூறிக் கொள்ள முடியவில்லை.
இந்நிலையில் நடைபெற்று முடிந்த தேர்தல்களில் பெரும்பாலான தொகுதிகளில், பெண்களின் வாக்குகள் அதிமுக கூட்டணிக்கு கிடைக்கவில்லை என உளவுத்துறை, தமிழக அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஒருபுறம் மக்கள் விரோத திட்டங்களை செயல்படுத்த முனைப்பு காட்டுவதால் விழுந்த அடி என்றாலும், ஜெயலலிதா உயிருடன் இருந்த போது சிந்தாமல், சிதறாமல் கிடைத்து வந்த பெண்குலத்தின் ஓட்டுகளை தவறவிட்டதாக அதிமுக தலைமை நினைக்கிறது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் துவங்கி இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் உள்ளாட்சி தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் பெண்களின் ஓட்டுகளை அதிமுக அரசு குறி வைத்து தூக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த தேர்தல்களின் போது இழந்த பெண்களின் ஆதரவை பெற, அவர்களின் வாழ்க்கையை சேதப்படுத்தும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட தயாராகி வருகிறது தமிழக அரசு.
முன்னதாக கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால், மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும். பின்னர் மதுவிலக்கும் அமல்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்தார் ஜெயலலிதா. பின்னர் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும் , 500 மது கடைகளை மூடியதுடன் டாஸ்மாக் வேலை நேரத்தை மதியம் 12 மணிக்கு மாற்றினார்.
ஜெயலலிதா மறைந்த பின் முதல்வரான எடப்பாடி 2017-ம் ஆண்டு 500 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர விட்டார். தொடர்ந்து 2018-ம் ஆண்டிலும் 500 மதுக்கடைகளை மூட திட்டமிடப்பட்டது. ஆனால் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டதன் காரணமாக, ஏற்பட்டநிதி நெருக்கடியால் அத்திட்டம் கைவிடப்பட்டது.
பின்னர் கடந்த ஜனவரியில் பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்கப்பட்டது. இதனாலும் கூடுதல் நிதி சுமை ஏற்பட்டதால் டாஸ்மாக் கடைகளை மூடும் அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில் மக்களவை தேர்தலில் மண்ணை கவ்வியதால் அதிர்ச்சியடைந்துள்ள ஆளும் அரசு, பெண்களின் வாக்குகளை கவர திட்டமிட்டு தற்போது காய் நகர்த்தி வருகிறது.
இதனால் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே, இதற்கான அறிவிப்பை வெளியிட்டு பெண்கள் மத்தியில் இழந்த செல்வாக்கை மீட்க ஆளும் அதிமுக அரசு ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications