அடுத்தடுத்து வந்த அதிர்ச்சி! எடப்பாடிக்கு எதிரான ‘6 ஆயுதங்கள்’! உற்சாக மோடில் ஓபிஎஸ்! உண்மைதான் போல!
சென்னை : அதிமுக இடைக்காலப் பொதுசெயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் தோல்வியடைந்ததாக ஓபிஎஸ் தரப்பு உற்சாகத்தில் இருந்து வரும் நிலையில், இபிஎஸ் தரப்புக்கு பின்னடைவாக கருதப்படும் 6 முக்கிய தகவல்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்..
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் நாளுக்கு நாள் தீவிரமாகி வரும் நிலையில், அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, பல அரசியல் கட்ட நகர்வுகளை ஓபிஎஸ் மேற்கொண்டு வருகிறார்.
அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பை கட்சியிலிருந்து நீக்கும் அதிரடி முடிவுகளையும் எடப்பாடி பழனிச்சாமி அடுத்தடுத்து மேற்கொண்டு வருகிறார்.

அதிமுக மோதல்
குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓபிஎஸ்-ன் மகன் உள்ளிட்டோர் நீக்கப்பட்ட அளவில் தற்போது அடுத்தடுத்து இரண்டு பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று கூட முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், சார்பு நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த நிலையில், புதிதாக மாவட்ட செயலாளர்களையும் தலைமைக் கழக நிர்வாகிகளையும் ஓபிஎஸ் நியமித்து வருகிறார்.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்ன் இந்த அதிரடி நடவடிக்கைகளுக்கு என்ன காரணம் என விசாரித்த போது நான்கு நாட்கள் டெல்லி பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருந்த எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் நரேந்திர மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் சந்திக்க மறுத்ததாகவும் இதன் காரணமாக பாதியிலேயே தனது பயணத்தை முடித்துக் கொண்டு எடப்பாடி பழனிச்சாமி திரும்பியதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் காரணமாக உற்சாகமடைந்துள்ள ஓ.பன்னீர்செல்வம் தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அதிரடி நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார்.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு
குறிப்பாக டெல்லி தரப்பிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு நேரம் நீட்டப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாகவே எடப்பாடி பழனிச்சாமிக்கு அடுத்தடுத்து நெருக்கடிகள் கொடுக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த நெருக்கடிகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம். அதற்கு முன்னதாக குடியரசுத் தலைவர் பதவியேற்பு நிகழ்வுக்கும் முன்னதாக, குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்தன் பிரிவு உபச்சார விழாவுக்கும் ஓ பன்னீர் செல்வத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால் அவர் டெல்லி செல்ல இயலவில்லை என்றும் இதனையே சிலர் புகாராக தமிழகத்தில் பரப்பி வந்ததாக கூறுகின்றனர் ஓபிஎஸ் தரப்பினர்.

சபாநாயகருக்கு கடிதம்
முதலில் ஓபிஎஸ் மற்றும் மகனான ஓபி.ரவீந்திரநாத்குமார் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு-க்கும் நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கும் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதினார். ஆனால் அந்த கடிதம் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. சட்ட விதிகளின்படி ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என இருவரும் கூறி இருந்தாலும் தற்போது இது நடந்து பத்து நாட்களுக்கும் மேல் ஆகியும் இருவரும் அதிமுக உறுப்பினர்களாகவே தொடர்கின்றனர். இதன் காரணமாக ஓபிஎஸ் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

டெல்லி பயணம் ரத்து
ஓபிஎஸ் பற்றிய புகார் பட்டியலுடன் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் மேற்கொண்ட நிலையில் அந்த பயணம் பாதியோடு முடிந்தது. மேலும் எதிர்பார்த்தபடி பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு சந்திப்புக்கு வாய்ப்பில்லாமல் போனது.இதனால் எடப்பாடி பழனிச்சாமிக்கு டெல்லி ஆதரவு இல்லை என உற்சாகத்தில் உள்ள ஓபிஎஸ் தரப்பு புதிய நிர்வாகிகள் நியமனம் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு நிர்வாகிகளை நீக்குவது என அதிரடி காட்டி வருகிறது.
Recommended Video

டெண்டர் முறைகேடு
2018ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களில் முறைகேடு நடந்ததாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், இபிஎஸ் அவரது உறவினர்கள், நெருங்கியவர்களுக்கு சட்டவிரோதமாக ஒப்பந்தத்தை வழங்கியதில் சுமார் ரூ. 4,833 கோடி முறைகேடு நடந்துள்ளதாக மனுவில் குறிப்பிட்டிருந்தார். அந்த வழக்கும் தற்போது அவருக்கு நெருக்கடியாக உள்ளது.

ஆதரவாளர்களுக்கும் சிக்கல்
அடுத்ததாக இபிஎஸ் ஆதரவாளர்களுக்கு தொடர்புடைய இடங்களில் தொடர்ச்சியான வருமான வரி சோதனைகள் நடைபெற்றது. வரி ஏய்ப்பு புகாரின் பேரில் அரசு ஒப்பந்ததாரர்கள் இருபது பேரின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடிச் சோதனை மேற்கொண்டனர். வருமான வரித்துறையின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள இருபது பேரும் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக அரசின் பணிகளை செயல்படுத்தி வரும் முதல்நிலை அரசு ஒப்பந்ததாரர்கள் ஆவர். பல கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை சார்ந்த பணிகளைச் செய்து வருகின்றனர்.

குட்கா வழக்கு உயிர்ப்பு
குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர்களும் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் மற்றும் அதிகாரிகள் மீது சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது என்ற வழக்கில் முன்னாள் அமைச்சர்களான சி விஜயபாஸ்கர் பிவி ரமணா ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 11 மீது நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம் எழுதியிருந்தது இந்த நிலையில் சிபிஐ வழக்கு பதிவு செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இப்படி ஓபிஎஸ்-க்கு எதிராக டெல்லி மேலிடம் செயல்படுவது போல கூறப்படுவதால் எடப்பாடி தரப்பு கடும் அதிர்ச்சியில் உள்ளது.

ரிசர்வ் வங்கி கடிதம்
அதிமுகவின் 7 வங்கி கணக்குகளை முடக்க வேண்டும், ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குநருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுந்தியிருந்தார். திண்டுக்கல் சீனிவாசன் கையெழுத்திட்ட காசோலை ஏற்கப்பட்டதாக கூறிய நிலையில் கடிதம் அனுப்பப்பட்டது. ரிசர்வ் வங்கிக்கு ஓபிஎஸ் கடிதம் அனுப்பிய நிலையில் அதனை பெற்றுக் கொண்டதாக ரிசர்வ் வங்கி மீண்டும் ஓபிஎஸ்-க்கு பதில் அளித்து இருந்தது. அந்த கடிதத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற குறிப்பிடப்பட்டிருந்ததால் ஓபிஎஸ் தரப்பு உற்சாகம் அடைந்துள்ளது.












Click it and Unblock the Notifications