தவெக இளம் எம்எல்ஏக்களின் கனவில் விழுந்த இடி! அதிமுக தலைகளுக்கு அமைச்சர் பதவியை அள்ளித்தரும் விஜய்
சென்னை: தமிழக சட்டசபையில் இன்று நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு ஒரு புதிய சரித்திரத்தின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், இதன் பின்னணியில் அரங்கேறும் அதிகாரப் பகிர்வு ஆட்டங்கள், கட்சிக்குள் பலத்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, தவெக தலைவர் விஜய்யின் 'தளபதிகளாக' களத்தில் நின்று வெற்றி பெற்ற இளம் எம்.எல்.ஏ-க்களின் முகம் இன்று வாடிப்போய்க் கிடக்கிறது.
மாறிய கணக்குகள் - அதிர்ச்சியில் இளைஞர் படை
தேர்தல் களத்தில் "மாற்றம்" என்ற ஒற்றைச் சொல்லை நம்பி, தங்களின் எதிர்காலத்தையே பணையம் வைத்துப் போராடியவர்கள் தவெக-வின் இளம் வேட்பாளர்கள். "புதிய தலைமுறை... புதிய அரசியல்" என்ற முழக்கத்தோடு சட்டமன்றத்திற்குள் நுழைந்த இவர்களுக்கு, அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்ற மிகப்பெரிய கனவு இருந்தது.

ஆனால், இன்றைய அரசியல் சூழல் தலைகீழாக மாறியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிலிருந்து பிரிந்து வந்து, எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையிலான 30 எம்.எல்.ஏ-க்கள் தவெக-வுக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளது ஆட்சிக்கு பலம் சேர்த்திருக்கலாம். ஆனால், அது தவெக-வின் ரத்தமான இளைஞர்களுக்குப் பெரும் பலவீனமாக மாறியுள்ளது.
பழைய தலைகளுக்குப் பச்சைக் கொடி?
ஆட்சியை நிலையாக சிக்கலின்றி தக்கவைக்கவும், பெரும்பான்மையை நிரூபிக்கவும் எஸ்பிவி மற்றும் சி.வி. சண்முகம் டீமுக்கு அமைச்சரவையில் முக்கிய இலாகாக்கள் ஒதுக்கப்படலாம் என்ற செய்தி காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. கடந்த காலங்களில் அதிமுக அமைச்சரவையில் கோலோச்சிய அதே முகங்கள், மீண்டும் தவெக ஆட்சியில் அமைச்சர்களாக வலம் வரப்போகிறார்கள் என்ற பேச்சு, கட்சிக்குள் இருக்கும் இளம் எம்.எல்.ஏ-க்களின் பொறுமையைச் சோதிக்கிறது.
"நாங்கள் களத்தில் நின்று எதிர்த்துப் போராடிய அதே பழைய அரசியல்வாதிகளை, இப்போது எங்களுக்கு மேலே அமைச்சர்களாகப் பார்க்க வேண்டுமா?" என்ற குமுறல் தவெக தரப்பில் ஓங்கி ஒலிக்கிறது. விஜய்யை மட்டுமே நம்பி அரசியலுக்கு வந்த 25-35 வயதுக்குட்பட்ட எம்.எல்.ஏ-க்கள், தங்களுக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் அனுபவம் என்ற பெயரில் தட்டிப் பறிக்கப்படுவதாக உணர்கின்றனர்.
அதிகாரப் பகிர்வு - விஜய்க்கு இருக்கும் சவால்
தமிழக அரசியலில் கூட்டணி ஆட்சி என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. சிபிஎம், சிபிஐ, காங்கிரசை நம்பி பயந்து பயந்து விஜய் ஆட்சி நடத்த முடியாது. தற்போதைய 150 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு என்பது சி.வி. சண்முகம் மற்றும் வேலுமணி தரப்பின் ஆதரவு இல்லாமல் சாத்தியமில்லை. எனவே, அவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுப்பது என்பது அரசியல் கட்டாயம். ஆனால், இந்த 'அரசியல் சமரசம்' கட்சியின் அடிப்படை நோக்கத்தையே சிதைத்துவிடுமோ என்ற பயம் தொண்டர்களிடம் ஏற்பட்டுள்ளது.
அதிமுகவின் மூத்த தலைகள் தவெக அமைச்சரவை உள்ளே நுழையவிருப்பது, இளம் எம்.எல்.ஏ-க்களின் அமைச்சராகும் வாய்ப்பை 90% குறைத்துவிட்டது.
இன்று நடக்கவிருக்கும் Floor Test விஜய்க்கு வெற்றியில் முடியலாம். ஆனால், அந்த வெற்றிக்குப் பிறகு அமையப்போகும் அமைச்சரவை விரிவாக்கம், தவெக-வுக்குள் ஒரு உட்கட்சிபோரை உருவாக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அனுபவத்திற்கு முன்னுரிமையா அல்லது மாற்றத்திற்கு முன்னுரிமையா?
முதல்வர் விஜய்யின் முன் நிற்கும் மிகக் கடினமான கேள்வி இதுதான். ஒருவேளை பழைய முகங்களுக்கே மீண்டும் மகுடம் சூட்டப்பட்டால், அது தவெக-வின் இளம் சிங்கங்களின் அரசியல் வாழ்வின் தொடக்கத்திலேயே ஒரு பெரிய முட்டுக்கட்டையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.












Click it and Unblock the Notifications