கஞ்சா போதையில் கார் ஓட்டிய இளைஞர்.. 2 பேர் பலி.. 4 பேர் படுகாயம்.. அதிகாலையில் அண்ணாநகரில் பயங்கரம்
சென்னை: கஞ்சா போதையில் தாறுமாறாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியுள்ளார் ஒரு இளைஞர். அதிகாலையில் நிகழ்ந்த விபத்தில் சாலையோரம் நின்றிருந்த 6 பேர் தூக்கி வீசப்பட்டனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 6 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
ஏரோநாட்டிகல் படித்து விட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர் ஆசிப். இவர் தனது நண்பர் ரமணா மற்றும் ஒரு பெண் தோழியுடன் மது, கஞ்சா அருந்திவிட்டு போதையில் கார் ஓட்டி வந்துள்ளார். சென்னை அண்ணாநகர் 2வது அவென்யூ பிரதான சாலையில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் அதிவேகமாக சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்தது.

சாலையோரம் நின்றிருந்தவர்கள், துப்புரவு பணியாளர், சூப்பர் மார்க்கெட் பாதுகாவலர் என 6 பேர் மீது கார் மோதியது. பின்னர் காரானது சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் கார் மோதி நின்றது. இந்த விபத்தில் சூப்பர் மார்க்கெட் காவலாளி நாகசுந்தரம், கல்லூரியில் 2ஆம் ஆண்டு மாணவர் விஜய் யாதவ் ஆகியோர் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த விபத்தை ஏற்படுத்திய காரில் வந்த மூன்று பேரில் இரண்டு பேர் தப்பிச் சென்றதையடுத்து, ஒருவரைப் பிடித்த பொதுமக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து காவல்துறையினர் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.
விபத்தை ஏற்படுத்திய ஆசிப் கைது செய்யப்பட்ட நிலையில், அவருடன் உடன் இருந்த அவரது பெண் தோழி ரமணா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஆசிப் என்பவர் கஞ்சா போதையில் இருந்தது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த வாரம் ஐடி ஊழியர் ஒருவர் காரை வேகமாக ஓட்டி வந்த போது தூய்மை பணியாளர் மீது மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டார். அவர் மீது லாரி மோதி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் தங்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று கருத்து கூறிய நிலையில் சென்னை மீண்டும் ஒரு விபத்து நிகழ்ந்து 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications