இளைஞர்கள் வாக்குகள் 3 கட்சிகளிடம் தான்.. உதயநிதி பிளான் வொர்க் அவுட் ஆகாது.. அலசும் ரங்கராஜ் பாண்டே!
சென்னை: 40 வயதுக்கு கீழே உள்ள இளைஞர்களின் 60% வாக்குகள் பாஜக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் ஆகிய 3 கட்சிகளிடம் தான் இருக்கிறது. மற்ற அனைத்துக் கட்சிகளும் சேர்த்து 40% இளைஞர்களின் வாக்குகளைத் தான் வைத்துள்ளன என நமது ஒன் இந்தியாவுக்கு அளித்துள்ள பிரத்யேக நேர்காணலில் மூத்த ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியல் களம் 2026 சட்டசபை தேர்தலை நோக்கி பரபரத்து வருகிறது. புதிதாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் தேர்தல் களத்திற்கு வருவதால், கூட்டணிகளில் மாற்றம் ஏற்படும் என்ற பேச்சும் நிலவி வருகிறது. இந்தச் சூழலில், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கட்டமைப்பை பலப்படுத்தும் வேலைகளில் இறங்கி உள்ளன. இந்நிலையில் நமது ஒன் இந்தியாவுக்கு மூத்த ஊடகவியாளர் ரங்கராஜ் பாண்டே பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அது இங்கே..

கேள்வி: சமீபத்தில் நடந்த அதிமுக ஐடி விங் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவுக்கு 10% வாக்குகள் குறைந்திருப்பதாக கூறி இருக்கிறார். எதன் அடிப்படையில் இப்படி பேசுகிறார்? 2026 சட்டசபை தேர்தலுக்கு மேலும் ஒரு கட்சியும் வருவதால் எடப்பாடி பழனிசாமி பதட்டப்படுகிறாரா?
ரங்கராஜ் பாண்டே: பதற்றப்படுவதற்கு எடப்பாடி பழனிசாமி ஒன்றும் குழந்தையல்ல. பல தேர்தல்களைப் பார்த்தவர். இதற்கு முன்பு, கட்சியினரை ஊக்கப்படுத்துவதற்காக, வாக்கு வங்கி ஒரு சதவீதம் கூடியிருப்பதாக பேசியிருந்தார். தேர்தல் முடிவுகளின் தரவுகளை ஆராய்ந்தாலே அதிமுகவின் வாக்கு வங்கி சரிந்திருப்பது வெளிப்படையாகவே தெரியும். கூட்டணி அமைந்திருந்தால் வந்திருக்க வேண்டிய வாக்குகளை வீம்பால் இழந்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி.
3 கட்சிகளிடம் தான்: 40 வயதுக்கு கீழே உள்ள இளைஞர்களின் 60% வாக்குகள் பாஜக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் ஆகிய 3 கட்சிகளிடம் தான் இருக்கிறது. மற்ற அனைத்துக் கட்சிகளும் சேர்த்து 40% இளைஞர்களின் வாக்குகளைத் தான் வைத்துள்ளன. திமுக இந்த இளைஞர் வாக்குகளை தக்கவைக்கும் நோக்கில் தான் உதயநிதி ஸ்டாலினை முன்னிறுத்தி உள்ளனர். ஆனால், அது இளைஞர்களின் வாக்குகளை கொண்டு வந்து சேர்க்காது.
பாஜக, அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால், சீமான் 12.5% வாக்குகளைப் பெற்றிருப்பார். பாஜக தனித்துப் போட்டியிட்டது தான் சீமான் வளர்ச்சி வேகத்தை தடுத்தது. ஏற்கனவே திமுகவின் வாக்கு சதவீதம் 6% குறைந்துள்ளது. 2026 சட்டசபை தேர்தலில் திமுகவின் வாக்கு வங்கி குறையும். தேர்தல் முடிவுகள் வரும்போது பாருங்கள்.
கேள்வி: ஓபிஎஸ் தொடர்ந்து, அதிமுக ஒன்றிணைய வேண்டும் எனக் கூறி வருகிறார். அதிமுக, எடப்பாடி பழனிசாமி - ஓபிஎஸ் - டிடிவி தினகரன் என ஒன்றிணையுமா?
ரங்கராஜ் பாண்டே: இன்றைக்கு இருக்கக்கூடிய நிலையில் அதிமுக ஒன்றிணைய சாத்தியம் இல்லை. அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கும்போது, ஓபிஎஸ், சசிகலாவை ஏற்றுக்கொள்ள மாட்டார். எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு ஆபத்து வந்தால் மட்டுமே ஒன்றிணந்த அதிமுக உருவாகும். அதிமுகவில் மீண்டும் ஒரு பெரும் பிளவு ஏற்பட்டால் ஒழிய, ஒன்றிணைவுக்கு வாய்ப்பே இல்லை.












Click it and Unblock the Notifications