குட் நியூஸ்.. தமிழ்நாட்டில் 28-வது நாளாக குறையும் கொரோனா.. கொங்கு மண்டலத்திலும் தொற்று சரிகிறது!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 8,633 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 287 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து 28-வது நாளாக குறைந்துள்ளது. தினசரி பாதிப்பில் கோவை தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது.
ஊரடங்கால் வந்த பலன்
கொரோனாவை தடுக்க தமிழ்நாட்டில் ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு கட்டத்தில் 36,000-க்கு மேல் சென்ற தினசரி பாதிப்பு தற்போது 10,000-க்கு கீழே சென்றுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 8,633 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயிழப்பும் குறைகிறது
இதனால் மொத்த பாதிப்பு 24,06,497 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 287 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு 48 பேர் இறந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 30,835 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 19,860 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 22,86,653 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்
கோவை தொடர்ந்து முதலிடம்
89,009 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,63,649 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 3,00,25,736 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 492 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் பாதிப்பு 500-கும் கீழே குறைந்து விட்டது. ஆனால் உயிரிழப்பில் சென்னைதான் முதலிடம். சென்னையை விட கோவையில் பாதிப்பு தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளது.
ஈரோட்டிலும் அதிகம்
கோவையில் மட்டும் 1089 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 353 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 143 பேருக்கும், மதுரையில் 160 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 156 பேருக்கும், திருவள்ளூரில் 220 பேருக்கும், திருச்சியில் 267 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 481 பேருக்கும், விருதுநகரில் 134 பேருக்கும், ஈரோட்டில் 964 பேருக்கும், சேலத்தில் 541 பேருக்கும், நாமக்கல்லில் 326 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.