அடேங்கப்பா! பொங்கல் கொண்டாட சென்னையில் இருந்து 8 லட்சம் பேர் பயணம்.. பஸ்களில் மட்டுமே இவ்வளவு பேரா?
சென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி 2 நாட்களில் சென்னையில் இருந்து 4.34 லட்சம் பேர் பேருந்துகள் மூலம் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. தொடர் விடுமுறை விடப்படுவதால் பொங்கல் பண்டிகையை கொண்டாட நகரங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அதன்படி, நகரங்களில் வசிக்கும் மக்கள் பெரும் திரளாக சொந்த ஊர்களுக்குச் சென்று வருகின்றனர்.

பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக நேற்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் கோயம்பேடு, கிளாம்பாக்கம் உட்பட 6 இடங்களில் இருந்து பேருந்துகள் புறப்படுகின்றன.
சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 4,706 சிறப்பு பேருந்துகளும், மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்ல 8,478 சிறப்பு பேருந்துகள் என அடுத்த 3 நாட்களுக்கு 13,184 சிறப்பு பேருந்துகளையும் இயக்க தமிழ்நாடு போக்குவரத்து துறை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து 4.34 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. மொத்தம் 7,474 அரசு பேருந்துகளில் 4.34 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 2,210 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. 2.30 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர் என போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் இருந்து நேற்று முன்தினம் 2,100 பேருந்துகள், 1,260 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 3,360 பேருந்துகள் இயக்கப்பட்டன. இவற்றில் மொத்தம் 1.95 லட்சம் பேர் பயணித்தனர். 2 நாட்களில் மட்டும் 4.34 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம் செய்துள்ளனர்.
சென்னையில் இருந்து கடந்த 2 நாட்களில் இயக்கப்பட்ட ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். விமானம் மூலமாகவும் ஆயிரக்கணக்கானோர் புறப்பட்டு சென்றுள்ளனர். இவ்வாறு கடந்த 2 நாட்களில் பேருந்து, ரயில், விமானங்கள் ஆகிய பொது போக்குவரத்து சேவைகள் மூலம் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
தென்மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மக்களால் விக்கிரவாண்டி சுங்கச் சாவடியில் மட்டும் ஒரு லட்சத்து 2 ஆயிரம் வாகனங்கள் கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ஏராளமானோர் நேற்று புறப்பட்டதால் தாம்பரம் ஜிஎஸ்டி சாலை உட்பட பல்வேறு சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இன்றும் முக்கிய சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications