ஸ்டாலினுக்கு வெற்றியா 85% வாக்குப்பதிவு!? எடப்பாடிக்கு சாதகமா? விஜய்க்கு அஸ்திவாரமா?
சென்னை: 2026 தேர்தல் களம் வெறும் அதிகாரப் போட்டியாக மட்டுமல்லாமல், திராவிடக் கட்சிகளின் பாரம்பரிய பலத்திற்கும் ஒரு புதிய சக்தியின் எழுச்சிக்கும் இடையிலான வாழ்வா சாவா போராட்டமாக மாறியிருக்கிறது. களத்தில் பதிவான வாக்குகள் யாருக்கு சாதகம் என்பதை ஆராய்வதை விட, திமுக, தவெக, அதிமுக என 3 கட்சிகளும் எத்தகைய வெற்றி சமன்பாடுகளை தங்களுக்குள் வகுத்துள்ளன என்பதை அறிவது இப்போது அவசியமாகிறது. தமிழக அரசியலின் அடுத்த 5 ஆண்டுகளை தீர்மானிக்கப்போகும் அந்த 3 முக்கியக் கணக்குகளின் அலசல் பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள சூழலில், களத்தில் நின்ற பிரதான கட்சிகள் இப்போது தங்களின் வெற்றி வாய்ப்புகளை வெவ்வேறு கோணங்களில் கணக்கிட தொடங்கியுள்ளன.

கடந்த காலத் தேர்தல் முடிவுகள், வாக்குப்பதிவு சதவீதம் மற்றும் மக்கள் மனநிலை ஆகியவற்றை முன்வைத்து, திமுக, அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய மூன்று தரப்புமே தங்களுக்குச் சாதகமான ஒரு பிம்பத்தைக் கட்டமைக்கின்றன. இந்த மும்முனைப் போட்டியில் யாருடைய கணக்கு மிகத் துல்லியமாக அமையப்போகிறது என்பதுதான் தற்போதைய அரசியல் விவாதங்களின் மையப்புள்ளி.
திமுகவா? அதிமுகவா? தவெகவா?
ஆளுங்கட்சியான திமுகவைப் பொறுத்தவரை, அவர்களின் கணக்கு முழுக்க முழுக்க 'வாக்குச் சிதறல்' என்ற ஒற்றைப் புள்ளியை மையப்படுத்தியே சுழல்கிறது. 2016-ம் ஆண்டு தேர்தலில் அதிமுக ஆட்சியில் இருந்தபோது, மக்கள் மத்தியில் சில அதிருப்திகள் நிலவினாலும், மக்கள் நலக் கூட்டணி என்ற மூன்றாவது அணி பிரித்த வாக்குகள் எப்படி ஜெயலலிதாவின் வெற்றிக்கு வழிவகுத்ததோ, அதே பாணியில் இம்முறை விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் பிரிக்கும் வாக்குகள் தங்களுக்கு மறைமுகமாக உதவும் என திமுக நம்புகிறது.
அதாவது, ஆட்சி மாற்றத்தை விரும்பும் ஆன்டி-இன்கம்பன்சி வாக்குகள், அதிமுக மற்றும் தவெக என இரண்டாகப் பிளவுபடும்போது, அது தங்களின் உறுதியான வாக்கு வங்கியைக் காப்பாற்றி, மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர வைக்கும் என்பது அறிவாலயத்தின் பலமான கணக்கு.
அதிமுக கணக்கு என்ன
அதிமுக தரப்பில் நிலவும் கணக்கோ முற்றிலும் வேறானது. கடந்த காலங்களில் எப்போதெல்லாம் வாக்குப்பதிவு சதவீதம் எகிறுகிறதோ, அப்போதெல்லாம் அது ஆளுங்கட்சிக்கு எதிரான அலையாகவே இருந்திருக்கிறது என்ற வரலாற்றை அவர்கள் கையில் எடுத்துள்ளனர்.
இந்த முறை பதிவாகியுள்ள 85 சதவீதத்திற்கும் மேலான வாக்குப்பதிவு, மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதற்கான அப்பட்டமான சாட்சி என அவர்கள் வாதிடுகிறார்கள்..
குறிப்பாக புதிய வரவான தவெக இளைஞர்களின் வாக்குகளைப் பிரித்தாலும், அதிமுகவின் பாரம்பரியமான கிராமப்புற வாக்கு வங்கியில் பெரிய பாதிப்பு இருக்காது என்பதும், திமுகவின் வாக்குகள் சிதறுவது தங்களுக்குச் சாதகமாக முடியும் என்பதும் எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கையாக இருக்கிறது.
சத்தமில்லாத புரட்சி
புதிதாகக் களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தைப் பொறுத்தவரை, அவர்களின் கணக்கு 1967 மற்றும் 1977-ம் ஆண்டு நிகழ்ந்த அமைதி புரட்சியை அடிப்படையாகக் கொண்டதாகவே தெரிகிறது.
அதாவது வழக்கமான அரசியல் கணக்குகளை தாண்டி, இதுவரை எந்தக் கட்சிக்கும் வாக்களிக்காத புதிய வாக்காளர்கள் மற்றும் மாற்றத்தை ஏங்கும் நடுநிலைப் பிரிவினர் தங்களுக்குப் பின்னால் திரண்டுள்ளதாக அவர்கள் கருதுகிறார்கள்..
மும்முனைப்போட்டி
அதுமட்டுமல்ல, திமுக மற்றும் அதிமுக ஆகிய 2 திராவிடக் கட்சிகளின் மீதும் சலிப்பில் இருக்கும் வாக்காளர்கள், இம்முறை ஒரு 3வது சான்ஸை நகர்ந்திருப்பதாகவும், அது மேலோட்டமாகத் தெரியாவிட்டாலும் தேர்தல் முடிவுகளில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் என்பதும் விஜய்யின் கணக்காக உள்ளது.
மேற்கண்ட 3 கட்சிகளின் கணக்கு இப்படி இருந்தாலும், இந்த தேர்தல் முன்னெப்போதும் இல்லாத ஒரு சிக்கலான சமன்பாட்டைக் கொண்டுள்ளது. நம்முடைய தமிழக மக்கள் பொதுவாக ஒரு தெளிவான தீர்ப்பை வழங்கக்கூடியவர்கள்.. அதிலும் இந்த முறை மும்முனை போட்டி நிலவுவதால், வாக்குச் சதவீதத்தில் ஏற்படும் மிகச்சிறிய மாற்றம் கூட ஆட்சியமைப்பதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.
சுருக்கமாக சொன்னால், இளைஞர்களின் வாக்குகள் யாருடைய பக்கம் அதிகம் சாய்ந்துள்ளன என்பதும், தேர்தல் நாளன்று அமைதியாக வந்து வாக்களித்த சைலண்ட் வாக்காளர்கள் யாருக்கு ஆதரவாக செயல்பட்டிருக்கிறார்கள் என்பதும்தான் வெற்றியை தீர்மானிக்கும்.
ஒருவேளை வாக்குகள் சமமாக பிரிந்தால், தமிழகம் இதுவரை பார்த்திராத ஒரு புதிய அரசியல் சூழலுக்குத் தள்ளப்படவும் வாய்ப்புள்ளது.. என்னதான் நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications