8-வது ஊதிய கமிஷன்! தாமதம் ஆகுமாம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஷாக்! ஏன் தெரியுமா?
சென்னை: 8-வது ஊதிய கமிஷன் படி 2026 ஜனவரி முதல் சம்பள உயர்வை எதிர்பார்க்கும் மத்திய அரசு ஊழியர்கள், மேலும் ஒரு ஆண்டுக்கு காத்திருக்க வேண்டியிருக்கும் என்று தெரிகிறது. ஊதிய கமிஷன் அளிக்கும் பரிந்துரைகளை மத்திய அரசு அமல்படுத்துவதில் கூடுதல் காலம் எடுத்துக்கொள்ளப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.
மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிப்பது தொடர்பாக பரிந்துரை அளிக்க 8-வது ஊதிய கமிஷன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய கமிஷன் எப்போது அமலுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ஊதிய கமிஷன் அமலுக்கு வருவது தாமதம் ஆகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக மத்திய அரசு வட்டார தகவல்கள் கூறியதாவது:-

8-வது ஊதிய கமிஷன்
8-வது ஊதிய கமிஷன் அதிகாரப்பூர்வமாக ஜனவரி 2026-ல் தொடங்கும். ஆனால், ஊதிய கமிஷனின் விதிப்படி சம்பளம், பென்ஷன்களில் மாற்றம் என்பது வரும் 2027 ஆம் ஆண்டு வரை அமலுக்கு வர வாய்ப்பு இல்லை என்று சொல்லப்படுகிறது. எனினும், பே கமிஷன் எப்போது அமலுக்கு வந்தாலும் 12 மாதங்களுக்கான நிலுவைத்தொகையுடன் வழங்கப்படும். ஊதிய கமிஷன் தொடர்பாக விவரம் அறிந்த அதிகாரிகள் வட்டாரம் கூறுகையில், ஊதிய கமிஷன் தொடர்பாக அமைக்கப்படும் குழு பரிந்துரைகளை 15 முதல் 18 மாதங்களில் இறுதி செய்யும்.
இறுதி அறிக்கை சமர்ப்பிக்கும் முன்பாக இடைக்கால அறிக்கையையும் இந்த குழு தாக்கல் செய்யும். எனினும், முழு அறிக்கையானது 2026 இறுதியில் சமர்பிக்கப்பட வாய்ப்புள்ளது. கமிஷன் தாக்கல் செய்யும் அறிக்கையை ஆய்வு செய்ய அரசு கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ளும். இதன் அர்த்தம் என்னவென்றால், சம்பளம் மற்றும் பென்ஷன் உயர்வு என்பது 2027களின் தொடக்கத்தில் அமல்படுத்தப்படும்" என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
கேபினட் ஒப்புதல் அளித்ததும்
இதற்கிடையே, 8-வது ஊதிய கமிஷனுக்கான Terms of Reference -க்கு அடுத்த மாதம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என்று சொல்லப்படுகிறது. ஊதிய கமிஷன் அமைப்பது தொடர்பான இறுதி கட்ட நடைமுறையில் அரசு ஈடுபட்டு இருப்பதாகவும், கேபினட் ஒப்புதல் அளித்ததும் அதிகாரப்பூர்வ அறிவிக்கை இது தொடர்பாக வெளியிடப்பட உள்ளதாம். இந்த பணிகள் முடிந்த பிறகு ஊதிய கமிஷன் தனது பணிகளை தொடங்கும்.
8-வது ஊதிய கமிஷன் அமைப்பது தொடர்பாக கடந்த ஜனவரி 16 ஆம் தேதி அரசு அறிவிப்பு வெளியிட்டது. அண்மையில் நாடாளுமன்றத்தில் 8-வது ஊதிய கமிஷன் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய அரசு அளித்த பதிலில், ஊதிய கமிஷனில் இடம் பெறும் உறுப்பினர்கள், தலைவர், டைம்லைன் உள்ளிட்டவைகள் அடங்கிய அறிவிப்பானை தகுந்த நேரத்தில் வெளியாகும் என்று மட்டும் தெரிவிக்கப்பட்டது.
ஊதிய கமிஷன் என்றால் என்ன?
பே கமிஷன் எனப்படும் ஊதிய கமிஷன் என்பது மத்திய அரசு துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிப்பது தொடர்பாக பரிந்துரை செய்ய அமைக்கப்படும். இந்தக் குழு பணவீக்கம் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாக கொண்டு அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களை திருத்துவது குறித்த பரிந்துரை அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும்.
இந்த பரிந்துரைகளின் படி மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்படும். 1947 ஆம் ஆண்டு முதல் 7 பே கமிஷன்கள் உருவாக்கப்பட்டன. தற்போது அமலில் இருக்கும் 7-வது ஊதிய கமிஷன் கடந்த 2016-ம் ஆண்டு அமலுக்கு வந்தது. இந்த ஊதிய கமிஷனின் காலம் அடுத்த ஆண்டுடன் முடிகிறது. இதனால் 8-வது ஊதிய கமிஷன் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications