தலைவாழை இலையில் சுடச்சுட பரிமாறப்பட்ட பிரியாணி! உதயநிதி ஸ்டாலினுடன் லஞ்ச் சாப்பிட்ட சிறுமி!
சென்னை: சேலம் திமுக இளைஞரணி மாநாடுக்கு 9ஆம் வகுப்பு மாணவி ஒருவர் ரூ.7,000 நிதி கொடுத்த நிலையில், அவருடன் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டு கவனம் ஈர்த்துள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொண்ட சுற்றுப்பயணம் குறித்தும் அங்கு நிகழ்ந்த சுவாரஸ்யமான நிகழ்வுகள் பற்றியும் உதயநிதி ஸ்டாலின் பின்வருமாறு கூறியிருக்கிறார்.

''பெரம்பலூர் செல்லும் வழியெங்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று வரவேற்றனர். ஆ.ராசா அண்ணன் அலுவலகத்துக்குச் செல்வதாகத் திட்டம். ஆனால், அலுவலகத்துக்குள் செல்ல முடியாத அளவுக்கு அவ்வளவு மக்கள் வெள்ளம். அந்த வெயில் நேரத்திலும் என்னைப் பார்த்துவிட்டுத்தான் செல்லவேண்டும் என்று நின்றார்கள். அவர்கள் எவரும் அழைத்து வரப்பட்டவர்கள் அல்ல என்பது தெரிந்தது.
மதிய உணவு உண்பதற்கு முன்பாக 9-ஆம் வகுப்பு மாணவி தர்ஷினி என்னை வந்து சந்தித்தார். அவர் அரியலூர் மாவட்டம், திருமானூர் மேற்கு ஒன்றிய திமுக இளைஞர் அணி நிர்வாகி மூர்த்தியின் அண்ணன் மகள். கழக மேடைகளில் பேசி வருபவர்.
கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு சமீபத்தில் மாவட்ட அளவில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் 'தமிழ்த் திரையுலகில் கலைஞரின் எழுதுகோல்' என்ற தலைப்பில் உரையாற்றி 2-வது பரிசாக 7,000 ரூபாய் வென்றிருக்கிறார். அந்தத் தொகையை இளைஞர் அணி மாநில மாநாட்டுக்கான நிதியாக அளிக்க வந்திருந்தார்.
எளிய குடும்பத்துப் பிள்ளைகள் கழகத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையையும், கலைஞரின் நினைவைப் போற்றும் விதமாகத் தொடர்ந்து இயங்குவதையும் நினைக்கும்போது நாம் இந்த இயக்கத்துக்காகவும் மக்களுக்காகவும் மென்மேலும் உழைக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. தங்கை தர்ஷினியுடன் மதிய உணவு அருந்தினோம்.''












Click it and Unblock the Notifications