கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் 11 மணிக்கு குண்டு வெடிக்கும்.. போலீஸாருக்கு பரபரப்பை கிளப்பிய போன் கால்
சென்னை: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலை அடுத்து போலீஸாரும் வெடிகுண்டு நிபுணர்களும் அங்கு வரும் பயணிகளிடம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இந்த பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். அது போல் பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு படையெடுக்க லட்சக்கணக்கானோர் வருகை தருவர்.

இங்கு மாநகர பேருந்து நிறுத்தமும் இருக்கிறது. இதனால் இங்கு எப்போதும் மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். இங்கு இரு சக்கர, நான்கு சக்கர வாகன நிறுத்துமிடமும் உள்ளது. இங்கு வாகனங்களை நிறுத்திவிட்டு பலர் பணிநிமித்தமாகவும் சொந்த பயணங்களுக்காகவும் வெளியூர் செல்கிறார்கள்.
இந்த நிலையில் இன்று காலை 10.19 மணிக்கு காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு போன் வந்துள்ளது. அதில் பேசிய நபர் சரியாக காலை 11 மணிக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பிளாட்பார்ம் 1 இல் குண்டு வெடிக்கும் என கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸார் இன்னும் 40 நிமிடங்கள் மட்டுமே இருந்ததால் உடனடியாக கோயம்பேடு போலீஸாருக்கும் வெடிகுண்டு நிபுணருக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் தேடியும் வெடிகுண்டு கிடைக்கவில்லை. இருப்பினும் 2ஆவது நடைமேடையில் தேடி வருகிறார்கள்.
அது போல் பயணிகளின் உடைமையும் சோதனை செய்யப்பட்டே உள்ளே அனுப்பப்படுகிறார்கள். கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் போலீஸார் குவிந்துள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்த நபரின் போனை டிராக் செய்து வருகிறார்கள். அரசின் நலத்திட்டம் தனக்கு கிடைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் மர்மநபர் சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் சோதனையில் அது புரளி என்பது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications