வடமாநில இளைஞர் மீது திடீரென பாய்ந்த துப்பாக்கி குண்டு! மிரண்ட சென்னைவாசிகள்.. என்ன நடந்தது
சென்னை: தலைநகர் சென்னையில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில இளைஞர் மீது திடீரென துப்பாக்கிக் குண்டு பாய்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியாவில் துப்பாக்கி வாங்கக் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. லைசென்ஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்தியாவில் துப்பாக்கியை வைத்திருக்க முடியும். அதுவும் அனைவருக்கும் லைசென்ஸ் கிடைத்துவிடாது.
அவர்கள் உயிருக்கு ஆபத்து இருக்கும் எனக் கருதினால் உள்ளிட்ட சில காரணங்களுக்கு மட்டுமே லைசென்ஸ் வழங்கப்படும். அவர்களுக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே தோட்ட வைத்திருக்க அனுமதிக்கப்படும்..

துப்பாக்கி
தேர்தல் காலங்களில், அல்லது வெளியூருக்குச் செல்லும் போது இந்த துப்பாக்கியையும் குண்டுகளையும் அருகில் இருக்கும் போலீஸ் நிலையத்தில் சரண்டர் செய்துவிட்டுத் தான் போக வேண்டும். இப்படி துப்பாக்கியை வைத்திருக்க இந்தியாவில் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளன. இதன் காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைப் போல இங்குத் துப்பாக்கி கலாச்சாரமும் அதனால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகம் இல்லாமல் இருக்கிறது. இருப்பினும், எதிர்பாராத சில சம்பவங்கள் மக்களுக்குத் துன்பத்தைத் தருவதாகவே உள்ளது.

தலைநகர் சென்னை
அதுபோன்ற ஒரு சம்பவம் தான் இப்போது தலைநகர் சென்னையில் நடந்துள்ளது.. சென்னை திரிசூலம் பெரியார் நகர் மெயின் ரோடு பகுதியில் சங்கர் என்பவரின் கட்டிடத்தில் 2ஆவது மாடியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன. பல வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இந்த கட்டுமான பணிகளில் ஈடுபட்டு இருந்தனர். அதன்படி அங்கு 27 வயதே ஆன இன்ஸார் ஆலம் என்பவரும் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தார்.

வடமாநில இளைஞர்
அவர் 2ஆவது மாடியில் சிமெண்ட் கலவைக்குத் தண்ணீர் ஊற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் வடமாநில இளைஞர் இன்ஸார் ஆலமின் காலில் திடீரென துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. கணுக்காலிற்கு மேலே துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. முதலில் என்ன நடந்தது என்றே அவர்களுக்குப் புரியவில்லை. காலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததைத் தெரிந்து கொண்டதும், அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு இன்ஸார் ஆலமை அழைத்துச் சென்றனர்.

நடந்தது என்ன
அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், அவரது காலில் பாய்ந்த குண்டு வெளியே எடுக்கப்பட்ட நிலையில், அந்த தோட்டா ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மீனம்பாக்கம் மலைப் பகுதியில் துப்பாக்கி சுடுதளம் அமைந்துள்ளது.. அங்கு சிஐஎஸ்எப் போலீசார் துப்பாக்கி பயிற்சி செய்து கொண்டிருந்த நிலையில், அங்கிருந்து துப்பாக்கிக் குண்டு வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

விசாரணை
பயிற்சி தளத்தில் இருந்து சுமார் 2 கிமீ திசை மாறி வந்த இந்த குண்டு வடமாநில இளைஞரைத் தாக்கியிருக்கலாம் என்று போலீசார் கூறுகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அடுத்தகட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கடந்த சில காலமாக இதுபோல துப்பாக்கிச் சூடு பயிற்சி தளத்தில் இருந்து தோட்டாக்கள் வரும் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications