பாஜகவின் முக்கிய 'கை'.. அத்தனை வார்னிங் கொடுத்தும் கேக்கலயே.. ஆக்ஷனில் குதித்த தமிழ்நாடு போலீஸ்
சோஷியல் மீடியாக்களில் ஷேர் செய்யப்படும் வீடியோக்கள் போலியானவை என தமிழ்நாடு காவல்துறை விளக்கமளித்திருக்கிறது
சென்னை: தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக வதந்தி பரப்பிய பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உமாராவ் மீது தமிழ்நாடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வாழ்வாதாரம் தேடி வட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் தொழிலாளர்கள் மீது அவ்வப்போது சிறு சிறு தாக்குதல் சம்பவங்கள் நடந்து வந்த நிலையில், காவல்துறையினர் இதில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வந்தனர். மறுபுறம் அரசியல் கட்சியினர் சிலர் இத்தொழிலாளர்கள் மீது தொடர்ச்சியாக விமர்சனத்தை முன்வைத்து வந்தனர். இந்த தொழிலாளர்களால்தான் தமிழ்நாட்டு இளைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இரண்டு வீடியோக்கள் வெளியாகின. இந்த வீடியோ குறித்து பீகார் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியான பாஜக பிரச்சினையை கிளப்பியது. கடந்த இரண்டு நாட்களாக நடந்த அமளி அம்மாநில முதலமைச்சர் நிதீஷ்குமாரின் அறிவிப்பால் முடிவுக்கு வந்தது. அதாவது, இந்த பிரச்சினை குறித்த உண்மை தன்மையை கண்டறிய 4 காவல்துறை அதிகாரிகள் கொண்ட குழு ஒன்று தமிழ்நாட்டுக்கு சென்று ஆய்வு நடத்தும் என கூறினார். அதன்படி இன்று இக்குழு தமிழ்நாட்டிற்கு வருகிறது.

விளக்கம்
அதேபோல மறுபுறம் தமிழ்நாடு காவல்துறையும் இப்பிரச்சினை குறித்து இந்தியில் தெளிவாக விளக்கமளித்திருந்தது. "தற்போது சோஷியல் மீடியாக்களில் ஷேர் செய்யப்பட்டு வரும் வீடியோக்கள் போலியானவை. இப்படி இரண்டு வீடியோக்கள் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. ஒன்று பீகார் - ஜார்க்கண்ட் தொழிலாளர்களின் மோதல். மற்றொன்று, தமிழ்நாட்டின் உள்ளூர் மக்களின் மோதல். எனவே இது தவறாக சித்தரிக்கப்பட்டு பரப்பப்படுகிறது. இதுபோன்று வதந்திகளை பரப்புபவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும்" என்று எச்சரித்திருந்தது. தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபுவும் இதே கருத்தை கூறியிருந்தார்.

வழக்குப்பதிவு
இந்நிலையில், காவல்துறையினரின் எச்சரிக்கையை மீறி வதந்தி பரப்பியதாக உத்தரப் பிரதேச மாநில பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உமாராவ் மீது தமிழ்நாடு காவல்துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிரசாந்த் உமாராவ் தனது டிவிட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டில் இந்தி பேசியதற்காக 12 வடமாநில தொழிலாளர்கள் கழுத்தறுக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்" என்று கூறியிருந்தார். ஆனால் அப்படி எந்த கொலையும் தமிழ்நாட்டில் நடக்கவில்லை என்று காவல்துறையினர் மறுத்துள்ளனர். அதேபோல திருப்பூரில் வடமாநில தொழிலாளர்களுக்கு என ஒலிபெருக்கி மூலமாகவும், அவர்களை நேரில் சந்தித்தும் இந்த போலி வீடியோவை கண்டு அச்சப்பட வேண்டாம் என்று நம்பிக்கையூட்டி வருகின்றனர்.

சொந்த ஊர் பயணம்
இந்நிலையில் இந்த வீடியோ வேகமாக பரவ தொடங்கிய நிலையில் வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் மூட்டை முடிச்சுகளுடன் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல புறப்பட்டனர். இது இந்த சம்பவத்தை மேலும் பரபரப்பாக்கியது. இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வடமாநில தொழிலாளர்கள், "நாங்கள் ஹோலி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்கிறோம். தமிழ்நாடு எங்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கிறது. எனவே இங்களுக்கு இங்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது. பண்டிகை முடிந்தவுடன் தமிழ்நாடு திரும்புவோம்" என்று கூறியுள்ளனர். இந்த விவகாரத்தில், போலி வீடியோக்கள் ஷேர் செய்து வரும் நபர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் கண்டனம்
முன்னதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசனுடன் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டிருந்தார். இதனையடுத்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், "இது போன்று வதந்தி பரப்புவோர்கள் இந்திய நாட்டிற்கும், நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும் எதிரானவர்கள்" என்று கூறியுள்ளார். மேலும், சமூக ஊடகங்களில் இப்படி கீழ்த்தரமாக சிலர் அரசியல் செய்வது கடும் கண்டனத்திற்குரியது என்றும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications