பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குறித்து சர்ச்சை..மேடையில் அடிக்கப் பாய்ந்த நடிகர் எஸ்.எஸ்.ஆர்.மகன்!
சென்னை: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்க்கையை விவரிக்கும் சினிமா பட விழாவில் மறைந்த லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் (எஸ்.எஸ்.ஆர்) மகன் கண்ணன் ஆவேசத்தை காட்டியது சர்ச்சையாகி உள்ளது.
தேசிய தலைவர் என்ற பெயரில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாறு சினிமாவாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த சினிமா படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

எஸ்.எஸ்.ஆர். கண்ணன் பேச்சு
இந்த நிகழ்ச்சியில் மறைந்த லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் மகன் எஸ்.எஸ்.ஆர். கண்னன் பேசினார். கண்ணன் பேசுகையில், இந்தப் படம் அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும்; தேவரய்யா யாருக்கும் சொந்தம் இல்லை; எல்லோருக்கும் பொதுவானவர்; எல்லோருக்குமாகவும் ஒன்றாக குரல் கொடுத்தவர் தேவரய்யா. இது ஒரு சரித்திரப்படம் தவறுகள் வந்துவிடக் கூடாது; இதில் நவமணி அய்யா திருத்தங்கள் செய்தார்.

லேடி நர்ஸ் வேண்டாம் என்ற தேவர்
இப்படத்தில் என்னுடைய தந்தையார் லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர். வரக்கூடிய 6 காட்சிகள் இருக்கின்றன. எஸ்.எஸ்.ஆராக நானே விக் போட்டு நடித்திருக்கிறேன். தேவரய்யா மருத்துவமனையில் அனுமதிக்கும் போது, லேடீஸ் நர்ஸ் எனக்கு வேண்டாம்; ஆம்பளைங்க நர்ஸ்தான் வேண்டும் என்றார். அதை என்னுடைய தந்தையார்தான் ஏற்படுத்திக் கொடுத்தார். தேவரய்யாவுடன் நெருங்கிப் பழகியவர்களில் என் தந்தையாரும் ஒருவர் என்றார் கண்னன்.

தேவரும் எம்பி பதவியும்
பின்னர் பேசிய பேச்சாளர், 1962-ல் தொகுதிக்கு போகாமலேயே தேவர் எம்.பி.யாக ஜெயித்துவிட்டார். உடல்நிலை காரணமாக அவர் பதவியேற்கப் போகவில்லை. 6 மாதமாக பதவியேற்காததால் காங்கிரஸ் எம்.பி. நாடாளுமன்றத்தில் இது குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது தேவர் உடல்நிலை குறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது. அதுவரைக்கும் தேவர் சித்த வைத்தியம்தான் செய்து கொண்டிருந்தார். அலோபதி மெடிசனில் அவருக்கு நம்பிக்கை கிடையாது. சசிவர்ணத் தேவர் மதுரை மருத்துவரிடம் தேவர் உடல்நிலை குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது லேடி டாக்டர், லேடி நர்ஸ் தொட்டுப் பார்ப்பாங்க.. அதெல்லாம் வேண்டாம் என்றார் தேவர். அப்போதுதான் வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பொய் சொல்லாதீங்க என சர்ச்சை
அந்த நேரத்தில் ஏற்காட்டில் எஸ்.எஸ்.ஆர். படப்பிடிப்பில் இருந்தார். எஸ்.எஸ்.ஆரின் தந்தை சூரியநாராயணத் தேவர், தேவரின் கிளாஸ்மேட். அந்த அடிப்படையில்தான் எஸ்.எஸ்.ஆர். போய் தேவரை பார்த்தார். ஆனால் தேவர் பீமேல் நர்ஸ் வேண்டாம் என்றெல்லாம் சொன்னார் என சொல்கிற சம்பவம் எல்லாம் நடக்கவே இல்லை. அது தேவரை சிறுமைப்படுத்துவது என்றார்.

அடிக்கப் பாய்ந்த எஸ்.எஸ்.ஆர். மகன்
அப்போது நாற்காலியில் இருந்து எழுந்த பேசிக் கொண்டிருந்த பேச்சாளரை நோக்கி ஆவேசமாக வந்த எஸ்.எஸ்.ஆர். கண்ணன், தேவரய்யா வரலாறு தெரியுமா உனக்கு? என்ன தெரியும்? என ஆவேசமாக அடிக்கப் பாய்ந்தார். ஆனாலும் அசராத அந்த பேச்சாளர், ஆமா தேவரய்யா பற்றி நீ சொன்னது பொய்டா என்றார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications