எங்கே போகிறது திமுக? இளைஞரணி சார்பில் தயாளு அம்மாள் பெயரில் விருதாம்- அடுத்து யார் பெயரிலோ?
சென்னை: திமுக இளைஞரணியின் சார்பாக தயாளு அம்மாள் சுயமரியாதை பெண்கள் விருது வழங்கப்பட்டிருப்பது அக்கட்சியில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பிடியில் கட்சி இருந்தவரை குடும்ப உறுப்பினர்கள் ஆதிக்கம் இருந்தாலும் அடக்கித்தான் வாசித்தார்கள். அதனால் குடும்ப கட்சி என்ற விமர்சனம் ஓரளவுக்கு மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தது.
உதயநிதியால் சர்ச்சை
ஆனால் கருணாநிதி மறைவுக்குப் பின்னர் அவரது குடும்ப கட்சிதான் திமுக; கட்சித் தொண்டர்கள் அவரது குடும்பத்துக்கு சேவகர்கள் என்கிற நிலைமை வெகுவேகமாக உருவாக்கப்பட்டுவிட்டது. குறிப்பாக திமுக தலைவர் ஸ்டாலின் மகன் நடிகர் உதயநிதியை கட்சிக்குள் கொண்டு வந்து இளைஞரணியில் அவசர அவசரமாக உட்கார வைத்தது மிகப் பெரும் விமர்சனத்துக்குரியதாகிவிட்டது.
தயாளு அம்மாள் விருது
இதனை புரிந்து கொண்டாவது உதயநிதி சற்றே அடக்கி வாசித்திருக்கலாம். ஆனால் ஆமா இது எங்க குடும்ப கட்சிதான் என்பதை நிரூபிக்கும் வகையில் திமுக இளைஞரணி சார்பாக பாட்டி தயாளு அம்மாள் பெயரில் விருதை அறிவித்திருக்கிறார். அதுவும் தயாளு அம்மாள் சுயமரியாதை பெண்கள் விருது என்று தலைப்பு. நெற்றி நிறைய திலகம் தாங்கிய படத்துடன் சுயமரியாதை பெண்கள் விருதுக்கு தயாளு அம்மாள் பெயரை சூட்டியிருப்பது திராவிடர் இயக்கத்தவரை முகம் சுளிக்க வைத்திருக்கிறது.
எத்தனை எத்தனை போராளிகள்
திராவிடர் இயக்கத்தில் மறைக்கப்பட்ட எண்ணற்ற ஒரிஜனல் சுயமரியாதை இயக்கப் பெண்கள் ஏராளம்.. தன் வாழ்வை தொலைத்து எதிர்காலத்தை தொலைத்து பெரும் போராளிகளாய் வாழ்ந்து மடிந்த பெண் போராளிகள் பல்லாயிரம்.. இவர்களில் யாரேனும் ஒருவரது பெயரை சூட்டாமல் தமது பாட்டி என்ற ஒற்றை காரணத்துக்காக மட்டுமே தயாளு அம்மாள் பெயரில் அதுவும் சுயமரியாதை பெண்கள் விருதை உதயநிதி தாம் தலைமை வகிக்கும் இளைஞரணி சார்பாக உருவாக்கி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தாமல் இருக்கவா செய்யும்?
அடுத்து யார் பெயரிலோ...
இப்படியே போனால் கருணாநிதி குடும்பத்தினர் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு அணியும் தங்களது குடும்பத்தினர் பெயரில் விருது கொடுப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும். எத்தனை காலத்துக்குத்தான் திமுக குடும்ப கட்சியே அல்ல.. அந்த கட்சியின் தொண்டர்கள் இடைவிடாது முட்டுக் கொடுக்கவும் முடியும்? கொஞ்சம் மூச்சு விட்டு பேசுவதற்காவது உதயநிதி வகையறாக்கள் இடம்தந்தால் போதும்
பாவம் உடன்பிறப்புகள்!